செவ்வாய், 30 ஜூன், 2020

எளிய அறிவுரைகள்


கேள்வி :
கடைப்பிடிக்க முடிந்த
எளிய அறிவுரைகள்
ஒரு"லிஸ்ட்" ப்ளீஸ்..?

பதில் :
என்னுடைய
"வாட்ஸ் அப்"க்கு வந்தது,
உங்களுக்கு
பயன்படுமான்னு
பாருங்கள்...

1.தொடர்ச்சியாக
இரண்டு முறை யாரையும்
போனில் அழைக்காதீர்கள்..
அவர்கள் முக்கிய
வேலையில் அல்லது
பேச முடியாத
சூழ்நிலையில் இருக்கலாம் !

2.திரும்ப தருகிறேன்
என்று உங்களிடம்
பணம் கடனாக
கேட்பவரிடம் ,
மனப்பூர்வமாக கேட்டுவிட்டு கொடுங்கள் .
"இது திரும்ப வருமா..
வராதா ? "என்று..!
அது உங்கள் கேரக்டரை
அவருக்கு உணர்த்தும் .
இதே போல் இரவல்
கொடுக்கும் பேனா ,புத்தகம்,
குடை போன்றவைக்கும் !

3.ஓட்டலில் சாப்பிடலாம்
என நண்பர் உட்பட யார்
அழைத்தாலும்,
"மெனு கார்டில் "
பார்த்து"காஸ்ட்லி "யாக
உள்ள எதையும் "ஆர்டர் "
செய்யாதீர்கள்..
அழைத்தவரையே
உங்கள் விருப்பப்படி
"ஆர்டர் " சொல்லுங்கள்
என வேண்டலாம்...

4.தர்மசங்கடமான
இது போன்ற
கேள்விகளை
தவிர்க்கலாம்...
"இன்னும் கல்யாணம்
ஆகலயா ? "
"குழந்தைகள்
இல்லையா ? "
"சொந்த வீடு
வாங்கவில்லையா..
கட்டவில்லையா ? "
"இன்னும் ஏன் கார்
வாங்கவில்லை ? "
இதெல்லாம் நமது
பிரச்சினை இல்லைதானே..?

5.தானியங்கி கதவை
திறக்க நேர்ந்தால்
பின்னால் வருபவர்
ஆணோ பெண்ணோ...
சிறியவரோ பெரியவரோ...
அவர்கள் வரும் வரை
மூடாமல் பிடித்திருப்பது
அவர்களை சமூகத்தில்
பொறுப்புள்ளவர்களாக
மாறச் செய்யும் !

6.மற்றவர்களின்
கருத்துக்கு மதிப்பளியுங்கள்,
மோசமாக இருந்தாலும்
"சாய்ஸில் "வைத்திருக்கலாம் !

7.அடுத்தவர்கள்
பேசும்போது
இடைமறிக்காதீர்கள்..
அவர்கள் கொட்டட்டும்..
இறுதியில்
அவர்களுக்கே நல்லது
கெட்டது தெரிந்துவிடும் !

8.யார் உதவினாலும்
பாரபட்சமின்றி  நன்றி
சொல்லுங்கள் !

9.பொதுவில்
புகழுங்கள்..இகழாதீர்கள்.
தேவையானால்
தனியாக இருக்கையில்
குறைகளை சுட்டிக்காட்டலாம் !

10.உடல் பருமனை
ஒருபோதும் கேலி
பேசாதீர்கள் !
"நீங்க ஸ்மார்ட்டாக,
கியூட்டாக இருக்கீங்க.."
என்று கூறுங்கள்..
உடல் எடை குறைக்க
அவராக கேட்டால் தவிர
நாம் அறிவுரை
வழங்கக் கூடாது .

11.யாரும் தனக்கு
"டாக்டர் அப்பாயின்மென்ட்"
இருக்கிறது போக வேண்டும்
என்றால் , உடனே என்ன
பிரச்சினை என்று
கேட்டுவிடாதீர்கள்...
அவர்களின் தனிப்பட்ட
நோய்கள் பற்றி
மற்றவர்களுக்கு
தெரியக்கூடாது என
நினைக்கலாம்..
எனவே விரைவில் நலம்
அடைவீர்கள் என்று
நம்புகிறேன் என்று
கூறலாம் .

12.நண்பர்களிடமோ,
யாரிடமோ நேரில்
சந்தித்து பேசும்போது
"செல் "லை நோண்டிக்
கொண்டிருக்காதீர்கள் !

13.கேட்டால் தவிர
அவசரப்பட்டு
அறிவுரை
வழங்காதீர்கள் !

14.யாருடைய தனிப்பட்ட
பிரச்சினையிலும்
வலியப் போய் நேரடியாக
தலையிடாதீர்கள் !

15.தெருவில் யாரையாவது
சந்திக்க நேர்ந்தால்
"ஸ்டைலு "க்காக கருப்பு
கண்ணாடி அணிந்திருந்தால்
கழற்றிவிட்டுப் பேசுங்கள்..
கண் பார்த்து பேசுதல்
நம்பிக்கைக்கு நல்லது !.


ஞாயிறு, 28 ஜூன், 2020

ரஜினி, சூப்பர்ஸ்டாராக ஆனதற்கு அவரது நடிப்பு மட்டுமே காரணமல்ல

அப்போதெல்லாம் நான் தீவிர கமல் ரசிகன். அதற்கு ஒரே காரணம், அவரது நடிப்போ தோற்றமோ அல்ல. எனது தோற்றம்தான் காரணம். மொத்த முடியையும் இழுத்து பின்னோக்கி வாரிவிடுவது எனது பதின்ம வயது ஹேர் ஸ்டைல்.“நீ கமல் மாதிரியே இருக்கடே” என்று நண்பர்கள் போட்ட பிட்டுகள்தான் நான் கமல் ரசிகனாவதற்கு முக்கிய காரணமே தவிர வேறெதுவும் இல்லை. ரஜினி ரசிகர்கள் மாதிரி சிலிப்பி விடுகிற மாதிரியான ஹேர் ஸ்டைல் அமையாததுதான் ரஜினி ரசிகனாகாததற்கு காரணம். கமல் ரசிகனாக இருந்தாலும், ரஜினி ரசிகர்கள் மீது பெரிய பொறாமை உண்டு. அவர்கள் விதவிதமா ஸ்டைல் பண்ணுவார்கள், நடப்பார்கள், பஞ்ச் டயலாக் பேசுவார்கள். ஆனால் கமல் ரசிகனுக்கு அப்படியான வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் கமல் ரசிகன்னு ஒரு திமிர் மட்டும் இருக்கும்.
எங்கள் ஊரை சுற்றித்தான் ‘முரட்டுக்காளை’ படப்பிடிப்பு நடந்தது. அதிலும் குறிப்பாக இன்றைக்கும் பேசப்படுகிற ரெயில் சண்டைக் காட்சி செங்கோட்டைக்கும், புணலூருக்கும் இடையிலான ரெயில் பாதையில் எடுக்கப்பட்டது. மலையை குடைந்து போடப்பட்ட ஆரியங்காவு குகை ரெயில் பாதையும் பிரபலம். பத்து பதினைந்து நாட்களாக சண்டைக் காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். செங்கோட்டையிலிருந்து புணலூர் செல்லும் பஸ்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது, ஷூட்டிங் பார்ப்பதற்காக. எங்கள் ஊர் ரஜினி ரசிகர்கள் ஒரு நாள் ஷூட்டிங் பார்க்க கிளம்பினார்கள். எனக்கும் அவர்களுடன் செல்ல ஆசை. ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா... என்ற தயக்கம் இருந்தது. என்றாலும் நானும் உங்க கூட வர்றண்டே என்றேன்.
ஒத்துக்கொண்ட அவர்கள் ஒரு கண்டிஷன் போட்டார்கள். “நீ ரஜினி ரசிகனா மாறணும்” என்றார்கள். எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஷூட்டிங் பார்க்கும் ஆசையிலும், ரஜினியைப் பார்க்கும் ஆசையிலும் சரிடே என்றேன். அழைத்துக் கொண்டு போனார்கள். ஆரியங்காவு வரை பஸ்சில் சென்று அங்கிருந்து ரயில் பாதை வழியாக நடந்தே ஷூட்டிங் நடந்த இடத்துக்குச் சென்றோம். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தைச் சுற்றி பாறையிலும், காட்டு மேட்டிலும், நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தார்கள். அருகில் இருந்த ஒரு வீட்டில் இருந்து ரஜினியை குடைபிடித்து அழைத்து வந்தார்கள். அன்றுதான் சூப்பர் ஸ்டாரை முதலில் நேரில் பார்த்தேன். ஆனால் சினிமாவிலோ, அல்லது பத்திரிகைகளில் வந்த படங்களிலோ இருப்பது போன்று அவர் இல்லை. தலையை சிலிப்பி விட்டு கையால் கோதிவிடும் ஹேர்ஸ்டைல் இல்லை. ஒரு புதுவிதமான ஹேர் ஸ்டைலில் இருந்தார்.
எங்கள் ஊரில் ரொம்ப சேட்டை செய்யும் பசங்களுக்கு அப்படித்தான் தலைமுடியை வெட்டி விடுவார்கள். அப்படித்தான் இருந்தார் ரஜினி. அவரை நேரில் பார்த்த சந்தோஷம் அதிகமாக இருந்தாலும் இனி ரஜினி ரசிகர்கள் அவ்ளோதான், இந்த மாதிரிதான் முடிவெட்டி திரிவானுங்க, ஊரே கேலி பேசும் என்கிற நினைப்பு சந்தோஷத்தைக் கொடுத்தது. “சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க...” கோஷம் காடு முழுக்க எதிரொலித்தது. “கமல் வாழ்க” என்று எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி நான் கோஷம் போட்டுக் கொண்டேன். ரஜினியை ஒரு ரெயில் பெட்டியின் மீது ஏற்றினார்கள். கம்புகளைக் கொண்டு சிலர் அவரைத் தாக்க... அவர் அதை தடுத்து அவர்களை அடித்து கீழே தள்ளினார். இதே காட்சியைத்தான் அன்று முழுக்க எடுத்தார்கள்.
ஒரு முறை ரஜினி தடுமாறி கீழே விழுந்தார். மொத்த கூட்டமும் ரெயில் கூரை மீது ஏறியது. ஒயிட் ஒயிட்டில் கீழே நின்று கொண்டிருந்த ஒருவர் (எஸ்.பி.முத்துராமன்) மளமளவென ரெயிலின் மேல் கூைரயில் ஏறி ரஜினியை கட்டிப்பிடித்துக் கொண்டு கலங்கினார். சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதே காட்சி படமானது. ரஜினியை நேரில் பார்த்தாகிவிட்டது. ஷூட்டிங்கும் போரடித்து விட்டது. ஊருக்குக் கிளம்பிவிட்டோம். அன்று முழுவதும் படுத்துக் கொண்டே யோசித்தேன். கமல் ரசிகனாக இருப்பதால் ஏதோ நாம் அவரைப்போல அழகாக இருப்பதாக நினைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் ரஜினி ரசிகனாக இருந்தால் ஸ்டைல் காட்டலாம், பஞ்ச் டயலாக் பேசலாம், அவர் பாணியில் அநீதியை தட்டிக் கேட்கலாம் என்பதால் ரஜினி ரசிகனாக மாற முடிவெடுத்தேன். பின்னோக்கி வாரிய தலைமுடியை பக்கவாட்டில் வாரி ரஜினி ரசிகனாக ஞானஸ்நானம் பெற்றேன். பெயருக்கு முன்னால் ரஜினி என்று சேர்த்துக் கொண்டேன்.
25 வருடங்களுக்குப் பிறகு.... பணி மாறுதலாகி சென்னையில் ‘தினகரன்’ நாளிதழுக்கு வந்தேன். பத்திரிகையாளர் என்ற முறையில் ரஜினியை விழாக்களிலும், பேட்டிகளிலும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கேள்வி கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், தனியாக சந்தித்ததில்லை. நான் வந்த புதிதில் அவர் பத்திரிகையாளர்களிடமிருந்து கொஞ்சம் விலகி இருந்தார். ரஜினி நடித்த படங்கள் அனைத்தும் வெறும் பொழுதுபோக்கு படங்களாகத்தான் பார்க்கப்படுகிறது.
பிற்காலத்தில் அவரின் படங்கள் உரிய கவனம் பெறாமல் போய்விடுமோ என்கிற எண்ணம் எனக்கு இருந்தது. அவர் நடித்த ‘கவிக்குயில்’, ‘ஆடுபுலி ஆட்டம்’, ‘ஆறு புஷ்பங்கள்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ போன்ற படங்களின் நெகட்டிவ்கள்கூட இப்போது இல்லை. இதனால் அவரது படங்களை எழுத்து வடிவில் ஆவணப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அவரது அனைத்து படங்களையும் ஏற்கெனவே பார்த்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை அவற்றைப் பார்த்து, அதன் நிறை குறைகளோடு ஆவணமாக்கினேன். அபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரையிலான படங்களை ஆவணப்படுத்தினேன். இந்த ஆவணம் புத்தகமாக வெளிவந்தது. இந்தப் புத்தகம் ரஜினியின் கவனத்துக்கு சென்றால் போதும் என்று நினைத்தேன். மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மூலம் அந்தப் புத்தகம் ரஜினியின் கரங்களுக்கு சென்று சேர்ந்தது. சேர்ந்த மறுவாரம் ரஜினி அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. “சார் உங்களைப் பார்க்கணும்னு விரும்புறாங்க. நாளை காலையில ஆபீஸ் வந்துடுங்க. முடிஞ்சா பேமிலியோட வாங்க” என்றார்கள். மறுநாள் நானும் என் மனைவியும் கிளம்பினோம். 12 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு. 11.30 மணிக்கு போன் வந்தது ரஜினி ஆபீசிலிருந்து. “ஹாய் மீரான்... எப்டி இருக்கீங்க? நான் ரஜினிகாந்த் பேசுறேன்” என்றது அந்தக் குரல். எனது சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. “சொல்லுங்க சார்...” என்று மட்டும்தான் சொன்னேன்.
“சாரி மீரான். இன்னிக்கு நம்ம மலேசியா வாசுதேவன் சார் தவறிட்டாரு... எனக்காக நிறைய பாடினவர்... அவர் குரலால்தான் நான் வளர்ந்தேன்... நீங்க பத்திரிகைக்காரர். உங்ககிட்ட போயி இதையெல்லாம் சொல்றேன் பாருங்க. இன்னிக்கு கொஞ்சம் அப்ெசட்டா இருக்கேன்.... நாளைக்கு மீட் பண்ணலாமா... உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லையே” என்றார். “அதெல்லாம் ஒண்ணுமில்ல சார். நாளைக்கு மீட் பண்ணலாம்” என்றேன். மறுநாள் காலை 11 மணிக்கு அவரை நானும், என் மனைவியும் சந்தித்தோம். அறைக்குள் நுழைந்ததும் அமர்ந்திருந்த ஷோபாவிலிருந்து எழுந்து வந்து கையைப் பிடித்து சில அடிகள் அழைத்துச் சென்று “உட்காருங்க ப்ளீஸ்” என்றபடி அமரவைத்துவிட்டு பின்னர் அவர் அமர்ந்தார். அறையில் இருந்த அவரது நண்பர்களை கொஞ்சம் வெளியில இருங்க, கூப்பிடுறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டு எங்களோடு பேசினார்.
“புக் படிச்சேன். ரொம்ப சூப்பர்... எக்ஸலண்ட்... எந்த புக்கையும் நான் ஒரே மூச்சில் படிச்சதில்லை. இதை ஒரே மூச்சில் இரண்டு முறை படிச்சிட்டேன். என்னோட ஃபுல் லைஃபையும் திரும்பிப் பார்த்த மாதிரி இருந்திச்சு. எப்டி உங்களுக்கு மைண்ட்ல இப்படித் தோணிச்சு. ெவரி நைஸ் ஜாப். ெராம்ப பெருமையா இருக்கு...” அவரே பேசிக் கொண்டிருந்தார். “பீவி என்ன பண்றாங்க?” என்று என் மனைவியைப் பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே கேட்டார். “ஹவுஸ் ஒய்ஃப்தான்” என்றேன். “என்னங்க ஹவுஸ் ஒய்ஃப்தான்னு ஈசியா சொல்றீங்க. உலகத்திலேயே கஷ்டமானது ஹவுஸ் ஒய்ஃபா இருக்கிறதுதான். என்ன பீவீம்மா நான் சொல்றது சரிதானே?...” என்று அவர் கேட்க, “ஆமாங்க சார்” என்று என் மனைவி சொல்ல அந்த அறையே குலுங்குற அளவுக்கு ஹா... ஹா... ஹா...ன்னு அவருடைய டிரேட்மார்க்கில் சிரித்தார்.
35 நிமிடங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். ‘பாபா’ முதல் குடும்பம் வரை மனம் விட்டு பேசினார். கடைசியாக, “எனக்கு எத்தனையோ ஃபேன் இருக்கலாம். நீங்கதான் அஃபிஷியல் ஃபேன். ஏன்னா எல்லாப் படத்தையும் பார்த்த ஆதாரம் உங்ககிட்டதான் இருக்கு” என்று சொல்லி சிரித்தார். “இனி அடிக்கடி பேசுவோம்” என்றார். கிளம்பும் போது தன் மேஜை டிராயரை திறந்து பளபளவென ஒரு தங்கச் சங்கிலியை எடுத்து அணிவித்தார். அணியும்போது அது என் மூக்குக் கண்ணாடிக்குள் சிக்கிக் கொண்டது. “இன்னும் கொஞ்சம் பெருசா வாங்கியிருக்கலாம்” என்றபடியே அணிவித்து மகிழ்ந்தார். பொன்னாடை போர்த்தினார். ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று ெபாறிக்கப்பட்ட நினைவுப் பரிசு ஒன்றை அளித்தார். 30 விநாடிகள் வரை அப்படியே கட்டிப்பிடித்தபடி நின்று அனுப்பி வைத்தார். எல்லோரும் அந்த அறையை விட்டு வெளியில் வந்தோம்.
கிளம்ப முற்பட்டபோது அறைக்கு வெளியில் வந்து மீண்டும் என்னை மட்டும் அழைத்தார். படபடப்புடன் உள்ளே சென்றேன். “எனக்கு ஒரு சின்ன ஆசை இருக்கு... ஆட்டோபயாகிராபி எழுதணும்னு நினைச்சேன். கொஞ்சம் எழுதவும் ஆரம்பிச்சேன். ஆனால் அதை எழுதினா சில உண்மையை மறைக்க வேண்டியதிருக்கும். சிலபேருக்கு அதனால் மனக்கஷ்டம் வரும். பொய்யா எழுதுறதும் பிடிக்கல. அதனால் அதை டிராப் பண்ணிட்டேன். ஆனா ஒரு ஆர்ட்டிஸ்டா ‘எந்திரன்’ பட எக்ஸ்பீரியன்சை எழுதணும்னு ஆசை. நமக்கு எழுத்துன்னா அது ைகயெழுத்து போடுறது மட்டும்தான். அதனால நான் சொல்றேன். நீங்க எழுதிக்கொடுங்க. யார் கண்ணுலேயும் படாம எங்காவது ஒரு பத்துநாள் போய் உட்கார்ந்து எழுதிட்டு வந்திடுவோம். பேசாம ஹிமாலயாஸ் போயிடுவோம். அதுதான் சரியான இடம்
“இது என் பாக்கியம் சார். நீங்க எப்ப கூப்பிடுறீங்களோ அப்போ வந்து நிப்பேன் சார்” என்றேன். சீக்கிரமே கூப்பிடுறேன் என்றார். வீடு வந்து சேர்ந்தோம். அன்று மாலை எனக்கு ஒரு சிறிய விபத்து. அதில் எனது செல்போன் தொலைந்து விட்டது.மறுநாள் ரஜினி என்னோடு பேச பலவாறு முயன்றிருக்கிறார். ஒரு வழியாக உடன் பணிபுரியும் தேவராஜைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அவர் போனுடன் வீட்டுக்கு ஓடிவந்தார். போனை கையில் தந்தார். ரஜினி பேசினார். “ஏன் என்னாச்சு.. உங்களைப் பிடிக்க முடியலை?” என்றார். விபரம் சொன்னேன். “ஹெல்த் பாத்துக்குங்க. அதுதான் முக்கியம். என்னோட இன்வைட்டை மதிச்சு வந்ததுக்கு ரொம்ப தேங்கஸ். பீவிகிட்டேயும் சொல்லிடுங்க. போன் வேணும்னா சொல்லுங்க கொடுத்து அனுப்புறேன்” என்றார். “பரவாயில்ல சார் உங்க அன்பே போதும்” என்றேன். ரஜினி, சூப்பர்ஸ்டாராக ஆனதற்கு அவரது நடிப்பு மட்டுமே காரணமல்ல.

சனி, 27 ஜூன், 2020

கருப்பு நிலா... கள்ளமில்லா வெள்ளை நிலா


கருப்பு நிலா - கவிஜி
*****************************
இந்த வாழ்வு எல்லா முடிச்சுகளையும் திரும்ப அவிழ்ப்பதில்லை. முடிச்சுகள் இல்லாத வாழ்வில் திருப்பங்கள் இல்லை.
ஒரு கோபக்கார இளைஞன்... குற்றம் காணும் போதெல்லாம் கொதித்தெழ ஒரு நோக்கம் இருந்தது. அந்த நோக்கத்தில் ஒரு தீர்க்கம் இருந்தது. அந்த தீர்க்கம் சென்னையை நோக்கி நகர செய்தது. ஆசை.....வெறி.. லட்சியம்.... எல்லாமே ஹீரோ. அதை நோக்கிய தொடர் முயற்சியில்.. ஹீரோவாவும் ஆனார். ஒரு பக்கம் ரஜினி என்கிற சிங்கம்.... ஒரு பக்கம் கமல் என்கிற யானை... இடையில் என்ன செய்து விட முடியும். ஆனால் செய்தார். தனக்கென ஒரு பாணி.. தனக்கென ஒரு வழி.. தனக்கென ஒரு ஸ்டைல். விஜயராஜா விஜயகாந்த் ஆனார்.
SA சந்திரசேகர் உடன்....." நீதியின் மறுபக்கம்......சட்டம் ஒரு விளையாட்டு.....சட்டம் ஒரு இருட்டறை...போன்ற படங்கள் அவருக்குள் இருக்கும் சிவப்பு மனிதனை வெளிக்கொண்டு வந்தது. தப்பு நடந்தா தட்டி கேட்பேன்டா என்ற துணிச்சல் இயல்பாகவே இருந்த மனிதர்க்கு அதே போல் அமைந்த கதாபாத்திரங்கள் ஒரு காத்திர தன்மையை அவருள் விதைத்தது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அது தான் நாம். அவர் ஹீரோவாக இருந்தார். ஒரு ஹீராவாகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
ஒரு கட்டத்தில்... ஹீரோவாக வாய்ப்பில்லை. 'முரட்டுக்காளை' படத்துக்கு ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வருகிறது. சினிமாவில் இப்படி நேருக்கு மாறாக என்னவெல்லாமோ நடந்து விடும். மனம் இங்கே எதற்கு வந்தோம் என்ற லட்சியத்தை பற்றி மீண்டும் சுழல்கிறது. வாழ்வில் இரண்டு வகை. ஒன்று.. கிடைத்ததை வைத்துக் கொண்டு வாழ்வது. இன்னொன்று இதுதான் வேண்டும் என்ற தீர்மானத்தோடு அதற்காகவே வாழ்வது. இவர் இரண்டாம் வகையை தேர்ந்தெடுத்தார்.
"நான் ஹீரோ மெட்டீரியல். வில்லன் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார்.
அந்த நேரத்தில் தான்.. பிலிம் இன்ஸ்டிட்டியூட்-ல் இருந்து புதிய சிந்தனை கொண்ட மாணவர்கள் வெளியே வந்தார்கள். புது வகை சினிமாவை எடுக்க போகும் லட்சியத்தோடு அவர்கள் வேலை பார்த்தார்கள். "ஊமை விழிகள்" என்றொரு நவீன பாணி திரில்லர் படம். அதில் ஒரு போலீஸ் கதாபாத்திரம். என்ன மாதிரி சினிமாவாக வரும் என்ற எந்த மாதிரியும் இல்லை. புது பசங்களை நம்பலாமா வேண்டாமா என்ற அனுபவம் சார்ந்த தயக்கம் வேறு. ஆனாலும்.. நண்பர் சந்திரசேகர் சொல்லி கதையை கேட்கிறார். நடிக்கிறார். படம் ஹிட். வழக்கமான ரூட் இல்லைதான். ஆனாலும்... இனி வழக்கத்துக்கு வர போகிற ரூட்...என்று புரிகிறது.
அதன் பிறகு "உழவன் மகன்.... செந்தூர பூவே" என்று அவர் அடித்தாடியது எல்லாம் அதகளம். எனக்கு தெரிந்து தரையில் ஓடுவது போல சுவற்றில் ஏறி... அப்படியே திரும்பி காலால் உதைத்து சண்டையிடத் தெரிந்த....முடிந்த....
பலம் வாய்ந்த நடிகர் அவராகத்தான் இருக்க முடியும். சண்டைக் காட்சியில்... எத்தனை ரிஸ்க் எடுக்க முடியுமா அத்தனை ரிஸ்க் எடுத்தார். உதவி என்று யார் கேட்டாலும்.... அவர் கதவு திறந்து இருந்தது. வெள்ளந்தி மனிதன். கோபமோ அன்போ அப்போதே வெளிப்படும்.
"ராஜநடை"யில்... மனைவி சாக போகிறாள் என்று தெரிந்து அழும் விஜயகாந்தை அத்தனை சீக்கிரத்தில் மறக்க முடியாது. அவர் அழுதால் படம் பார்க்கும் தாய்மார்கள் அழுவார்கள். அழுதார்கள். "செந்தூரப்பாண்டி"யில் நம்ம தளபதியை என் தம்பிடா என்று பட்டி தொட்டியெல்லாம் கூட்டி சென்று அறிமுகப் படுத்திய மேன்மை குணம் கொண்ட சினிமா மைந்தன். "கேப்டன் பிரபாகர"னை விடுத்து அவரை முழுமையாக பேசவே முடியாது. அது மைல்கல். இளம் ரத்தம் செல்வமணியுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம்... வீரபத்திரனையும்... அவன் பின்னால் இருந்த அரசியல் குள்ளநரிகளையும் சாலைக்கு இழுத்து வந்து கேள்வி கேட்டது. அதுவும் இறுதிக் காட்சியில் பேசும் வசனங்கள் எல்லாம்.. நான் ஏழாவது படிக்கையில் பார்த்தது. ஆனாலும் இன்னமும் ஆழமாய் மனதுக்குள் பதிந்திருக்கிறது. படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட இடைவேளை காட்சியில் ஹீரோ அறிமுகம் என்பதே ஒரு வித்தியாசமான முயற்சி. மிரள விட்ட அதிரி புதிரி சினிமா. நண்பர் சரத்குமாருக்கு வாழ்வு கொடுத்த படம்.
பெரிய மருது.....கோயில் காளை......திருமூர்த்தி......ஏழைஜாதி......பூந்தோட்ட காவல்காரன்... என்று எங்களூரில் இருந்த நான்கு தியேட்டர்களிலும் மாறி மாறி பார்த்திருக்கிறேன். கண்கள் சிவக்க விஜயகாந்த் திரையில் சண்டையிட ஆரம்பித்தால்... உள்ளிருந்து ஒரு புரட்சிக்காரன் எங்களுக்குள் எழுவான். "தப்பு பண்ணினா தட்டி கேளு" என்ற பாடத்தை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்றால் சினிமா தாண்டிய திரைக்கதை நிஜத்தில் இருக்கிறது என்று நம்புவோம்.
வைதேகி காத்திருந்தாள்......அம்மன் கோயில் கிழக்காலே.....என் ஆசை மச்சான் என்று R.சுந்தர்ராஜனோடு சேர்ந்து நடிப்பில் தனக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது என்றும் நிரூபித்தார். "என் ஆசை மச்சான்"படத்தில்...ஒரு காட்சியில் ரேவதியை மூச்சு விட கூடாது என்று சொல்ல அவர் நிஜமாகவே மூச்சு விடாமல் இறந்து போக இறந்து போன ரேவதிக்கு அழுகையை அடக்கிக் கொண்டே தாலி கட்டும் காட்சிக்கெல்லாம்.....அப்போது எங்கள் வீதி பெண்கள் கண்ணீரை சமர்பித்தார்கள். வாரம் முழுக்க வீதிகளில் அது பற்றிய பேச்சு இருந்தது. விக்ரமனின் "வானத்தை போல" மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சண்டைக்காட்சி மட்டுமல்ல.. அன்புக் காட்சிக்கும் விஜயகாந்த கச்சிதமாக பொருந்துவார் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தார்.
தளபதியை எப்படி ஊருக்கெல்லாம் கூட்டி சென்று அறிமுகப் படுத்தினாரோ...அப்படி சூர்யாவையும் ஊரெல்லாம் கூட்டி சென்று "இவன் நல்லா நடிப்பான்... கொஞ்சம் கவனிங்க" என்று சொல்லாமல் சொல்லிய "பெரியண்ணா" வுக்கு காலத்துக்கும் சூர்யா நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும். "புலன் விசாரணை" இன்னும் நம்மை அதிர செய்யும். "திரும்ப வரணும்....பழைய பன்னீர் செல்வமா திரும்ப வரணும்..." என்று திலகன் சொல்லும் "சத்ரியன்" விஜயகாந்த் என்று முழு நடிகனை உலகுக்கு காட்டியது. எ கம்ப்ளீட் ஆக்டர்.
"சிறையில் பூத்த சின்ன மலர்" என்ற படத்தில் முதல் சண்டையில் கைகளை உபயோகிக்காமல் கால்களாலேயே சண்டை செய்திருப்பார். கால்களில் மட்டும் அல்ல மனதிலும் பலம் உள்ள மனிதன். "ரமணா" வாய்ப்பையெல்லாம் மிக அற்புதமாக பயன் படுத்திக் கொண்டார். அந்த ப்ரஃபஸர் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தியது ஒரு பக்கம் என்றால்.. மனைவி மகளை எரித்த பிறகு... சம்பந்தப்பட்ட அலுலகத்துக்குள் புகுந்து கதவை சாத்திவிட்டு பழைய ஹேர் ஸ்டையிலில் இருக்கும் விஜயகாந்த் சுளுக்கெடுக்கும் காட்சி... காலத்துக்கும் தேவையான சண்டை.
ராம்கியும் நிரோஷாவும் சந்திரசேகரும்.. ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் அடித்து பிடித்து ஏறி இருப்பார்கள். வர வேண்டிய "கேப்டன்" இன்னும் வரவில்லை. ரயிலில் இருந்து பார்க்கையில்.... தூரத்தில்...காட்டுக்குள்... கேப்டன் ஓடி வந்து கொண்டிருப்பார்.
"கேப்......ட்ட்டன்........ கேப்......ட்ட்டன் " என்று இவர்கள் கத்துகிறார்கள். மனோஜ் கியானின் இசையில்....காட்டுக்குள் இருந்து ஒரு சிங்கத்தை போல ஓடி வரும் விஜயகாந்தை திரை அதிர நாம் ரசித்தோம். இன்றும் அந்த காட்சி மனதை விட்டு அகலவில்லை. இந்தப்பக்கம் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப்பக்கம் அடியாட்களின் கொடூரமான துரத்தல். அவர்களோடு சண்டையிட்டுக் கொண்டே ரயிலை பிடிக்க ஓடி வந்து கொண்டிருப்பார். மயிர் கூச்செரியும் காட்சி. என்னாகுமோ ஏதாகுமோ என்ற பரிதவிப்பு ரயில் சத்தத்தோடு மனதின் சத்தம் நமக்கு பரபரக்கும். காடு.....மேடு...... ரயில் செல்லும் பாலத்தின் மேற்பரப்பு...ரயிலின் மேற்கூரை என்று ரயிலோடு தொடர்ந்து ஓடிக் கொண்டே சண்டையிட்டு வரும் கேப்டனை ஒரு சாகச மனிதனாகத்தான் அந்த வயதில் பார்த்தேன். அந்த கதாபாத்திரத்தில் வாழ்வை சம நிலைப்படுத்தும் ஓர் அர்த்தம் இருப்பதை இப்போது உணர்கிறேன்.
எடுத்த காரியத்துக்காக இறுதி வரை போராடும் சாகச திரைக்கதைகள்.... காலத்தால் அழிக்கவே முடியாத காட்சி அமைப்புகள் விஜயகாந்த் சினிமாக்களில் மிக அழகாக அரிதாரம் பூசின. செந்தூர பூ என்று ஒரு பூ இல்லை என்று கங்கை அமரன் ஒரு முறை சொல்லி இருக்கிறார். ஆனால் எப்போதும் நம் மனதில் வேர் விட்டு பூத்து குலுங்கும் செந்தூர பூ மரம் விஜயகாந்த். அற்புதங்களை அழகாக்கி அவரின் புன்னகையாக்கி விட்ட அவரின் சினிமாக்களை மீண்டும் மீண்டும் நாம் ரசித்துக் கொண்டுதானிருக்கிறோம். நல்ல கலைஞனை சினிமா ரசிகன் ஒரு போதும் கை விடுவதில்லை.
"சின்ன மணி குயிலே.... மெல்ல வரும் மயிலே..."என்று நெற்றி மறைக்க அரை வட்ட கற்றை முடியோடு சிரிக்கும் விஜயகாந்த் என்ற மாபெரும் நடிகனை "பாட்டுக்கொரு தலைவன்" என்று ஆராதிக்கிறேன்.
2001 ம் ஆண்டு கலைமாமணி விருது வாங்கினார். இன்னும் வந்திருக்க வேண்டிய விருதுகள் ஏராளம். பழைய பன்னீர் செல்வமாக திரும்பி வரணும் என்பது தான்... அவரை அணு அணுவாக ரசித்த ஒரு ரசிகனின் ஆசை. திரும்ப பழைய பன்னீர் செல்வமா வரணும். வருவார். நம்புவோம்.
கவிஜி




Comments


ரேவதி எனும் நடிப்பு தேவதை

ரேவதி
ஒற்றை வார்த்தையில் அத்தனையும் தாண்டிய உயரத்தை எனக்குள் தொட்டு விடுகிறார். அந்த வார்த்தைக்கு வருவதற்கு முன்னால் ரேவதியோடான அறிமுகத்தை பார்த்து விடலாம்.
மீசை முளைக்காத கல்லூரி காலக்கட்டத்திலேயே ரேவதி பரிட்சயம்.. மண்வாசனை படம் பார்த்த அந்த தருணத்தில் இருந்து ரேவதி என்கிற யதார்த்தத்தின் ஆளுமை கண்டு கோப்பெருஞ்சோழன், பிசிறாந்தையார் போலவொரு பரவசம் உணர்ந்திருக்கிறேன். அவர் நடிகைகளின் சொல்லி வைக்கப்பட்டிருந்த வரையறைகளை தகர்த்தெறிந்தவர். துளியும் ஆபாசமில்லாமல் அழகாய் அவரால் அத்துனை படங்களிலும் தரிசனிக்க முடிந்திருக்கிறதென்றால் அந்த அழகு ஆன்மத்திலிருந்து, வேரிலிருந்து விரிவதாய் இருக்கிறதே காரணம்.
அவரின் துள்ளலான, துடுக்குத்தனமான நடிப்பென்றே உணர விடாத அந்த நடிப்பு தமிழ் திரையுலகத்தின் கௌரவங்களில் முக்கியமான கௌரவம்.. நடிகைகளில் சாவித்ரிக்கு இணை இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே யாரும் கிடையாது என்பதை நடிப்புல ஜாம்பவான்கள் பலரும் தங்கள் வாயாலேயே மனதார சொல்லிச் சென்றிருக்கிறார்கள். களத்தூர் கண்ணம்மாவில் ஒரு கட்டத்தில் தன் பிள்ளையான குட்டி கமலை உயிரோடு அனாதை ஆசிரமத்தில் விட்டுவிட்டு, பிறக்கும்போதே இறந்துவிட்டதாக தந்தையான எஸ்.வி.சுப்பையா சொல்வார். உடனே சிரித்துக்கொண்டே அழுவார் பாருங்கள்.. செத்துவிட்டேன். அப்படியான சாவித்ரியின் அடையாளங்களை ரேவதியின் நடிப்பில் உணரலாம்.
எனக்கு துடுக்குத்தனமான பெண் கதாபாத்திரங்கள் என்றால் அத்தனை இஷ்டம். கே.பாலசந்தரின் வெள்ளிவிழா என்றொரு படம். அந்த படத்திற்கு பின்னால் ஒரு கதை உண்டு. அப்போது விடுமுறைக்கு ஆண்டிபட்டியில் இருந்த சுப்பிரமணி மாமா வீட்டிருக்கு போயிருந்தேன். அவரும் இன்று இரவு சினிமாவிற்கு போகலாம் என்றுவிட்டார். அது என்ன படம் என்றாலும் பிரேமை தான். மூன்று வயதிலிருந்து அய்யம்மாவை சினிமாவிற்கு அழைத்துப் போய் அழைத்துப்போய் அந்த ருசி என் மனதிலும் ஒட்டிக்கொண்டுவிட்டது. மாமா வேலை முடித்து வர இரவாகிவிடும் என்பதால் செகன்ட் ஷோ போவதென ஏற்பாடு. நான் இரவு செமத்தியாக சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டேன். எத்தனை எழுப்பியும் எழுந்திரிக்கவில்லை. அதனால் என்னை அப்படியே தூங்கவிட்டுவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். மறுநாள் ஒரே அழுகாச்சி. அப்போதிருந்து என்னிடமிருந்து தப்பித்த அந்த வெள்ளிவிழா படம் பிறிதொரு தருணம் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். அந்த வாணிஸ்ரீ கதாபாத்திரம் என் கனவு தேவதை கதாபாத்திரம். அதன் பிறகு அந்த படத்தை டிவிடியில் பத்துக்கும் மேற்பட்டு பார்த்தும், பார்த்துக்கொண்டுமிருக்கிறேன்..
பூவேபூச்சூடவா நதியா, வாழையடி வாழை ஜெயச்சித்ரா, நாடோடி மன்னன் பானுமதி, உத்தரவின்றி உள்ளே வா ரமாபிரபா, அரங்கேற்றம் பிரமிளா, புதுவசந்தம் சிதாரா, பாலைவனச்சோலை சுஹாசினி, அவள் அப்படித்தான் ப்ரியா என்று எவ்வளவோ கதாபாத்திரங்கள் உயிருக்கு உயிர்ப்பாகிற பிடித்தங்கள்.
எனக்கு பிடித்த பெண் பிம்பமென்றால் அது துறுதுறுப்பாக, கலகல பட்டாசாக, பூத்துக்குலுங்குகிற தூவானமாக, பாரதித்தனங்களோடான கலவையாக தினந்தினம் புதுசாகிக் கொண்டே இருக்கிற கலவை தான்.
அப்படித் தான் ரேவதி மௌனராகம், பகல் நிலவு, ஒரு கைதியின் டைரி, உன்னை நான் சந்தித்தேன், புன்னகை மன்னன், தேவர் மகன் என பல படங்களில் வாழ்ந்திருப்பார். அவரை நான் நேரில் சந்திப்பதற்கான தருணமும் தற்செயலாகவே வந்தது.
அப்போது நான் இயக்குநர் வஸந்த்திடம் துணை இயக்குநராக இருந்தேன். அவரது படவேலைகள் இன்னும் மும்முரமாகியிருக்கவில்லை. ஆனாலும் நாங்கள் தினந்தினம் சந்திப்போம். பாலசந்தர் சார் வீட்டுக்குள் இருக்கிற காவேரி கெஸ்ட் ஹவுஸில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். சினிமா, இலக்கியம் என்று பொதுவாக பேசிக்கொண்டு, இடையிடையே பிளாஸ்க்கிலிருந்து சுடச்சுட சங்கீதா காஃபியை எடுத்து அருந்தியபடி. அந்த கதையை பிரிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.
அப்படியான ஒரு தருணத்தில் என்னிடம் கேட்டார். ரேவதிக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிற ஆற்றலோடு ஒரு இணை இயக்குநர் தேவையாம். நீ போகிறாயா.. நம்ம ப்ராஜக்ட் ஆரம்பிக்கிறப்போ நீ இங்க வந்துக்கலாம் என்றார். சரி என்று போய் பார்த்தேன்..
அத்தனை பெரிய வீடு. அடையாறு காந்தி நகர். அப்போது அவர் மித்ரு மை ஃபிரண்ட் என்றொரு படம் எடுத்துக் கொண்டிருந்தார். நேராக உள்ளே போய்விட்டேன். கண்ணாடி கதவு வழியாக அவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிகிறது. அவர் பார்த்துவிட்டார். உடனே சாப்பிட்ட கையோடு விரலை சுவைத்துக்கொண்டே எனக்கு அழகாக, அவருக்கு பதட்டத்தோடு ஓடி வந்தார். வெளிய காலிங் பெல் இருக்கு அடிச்சிட்டு வந்திருக்கலாமே.. என்னா இங்க நாய் அவுத்து விட்டுருப்பாங்க என்றார் மிரட்சியோடு. உடனே நான் மிரண்டுபோய் சரசரவென பின்வாங்கினேன்.
எனக்கு எப்போதுமே நாய் என்றால் பயம். ஆனால் நாய்களுக்கு என்னிடம் எந்த பயமும் கிடையாது. தெருவில் போனால் கூட என்னை பார்த்து எந்த நாயாக இருந்தாலும் குரைக்காமல் வாலை தான் ஆட்டும். இருந்தாலும் சின்ன வயதிலிருந்தே நாய் என்றால் பயம். எங்கள் கிராமத்தெருவில் மணி என்று ஒரு நாய் இருந்தது. அதன் பார்வையில் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் அந்த தெருவின் மற்றொரு பக்கம் வழியாக தான் வீட்டிற்கே செல்வேன். என்னவோ மணிக்கு நம்மலால குடுக்க முடிஞ்ச மரியாதை..
நான் அத்தனை பயப்படுவேன் என அவர் நினைத்திருக்கவில்லை. உடனே புன்னகையோடு நான் இருக்கன்ல.. சும்மா வாங்க.. என்று உள்ளே தன்னுடைய அலுவலக அறையில் அமர வைத்துவிட்டு, போய், விரைவிலேயே திரும்பி வந்தார். விவரம் கேட்டுவிட்டு, விஜய் தொலைக்காட்சிக்கு ‘கதை கதையாம் காரணமாம்’ என்றொரு தலைப்பில் ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு பிரபல எழுத்தாளரின் சிறுகதையோ, குறுநாவலையோ, நாவலையோ எடுத்துக்கொண்டு அதற்கு நான் திரைக்கதை, வசனம் எழுதித் தர வேண்டும். இந்த வாரம் சுஜாதா என்றால் அடுத்த வாரம் பாலகுமாரன் அதற்கடுத்த வாரம் பாலகுமாரன் என்று அந்த வரிசை அப்படியே நீளும். ஒவ்வொருவரின் கதையும் ஒரு வாரத்திற்கு தினந்தினம் ஒளிபரப்பாகும். அப்படியே இணை இயக்குநராக படப்பிடிப்பு தளத்தில் பணியாற்ற வேண்டும் என்றார். சம்மதித்தேன்.
அதை விஜய் டீவிக்காக தயாரித்தது ரேவதியின் டெலிஃபோட்டோ நிறுவனம் தான். முதல் கட்டமாக சுபா வெங்கட், எழுத்தாளர் வாஸந்தி, நான், ரேவதி, சண்முகம் போன்றவர்கள் அமர்ந்து வட்டமேஜை மாநாடு நடத்தினோம். அதில் அவரவரை பாதித்த கதைகளை பற்றி ரேவதி பேசச் சொன்னார்.
கரும்பு தின்ன கூலியா சும்மாவே நிறைய பேசுவேன்.. அதுவும் உலக சினிமா, இலக்கியம் பேசுடா என்றால் கேட்கவா வேண்டும். கு.அழகிரிசாமியிலிருந்து, இந்திய அளவில், உலக அளவில் அசத்திய எழுத்தாளர்களின் மனதை தொட்ட படைப்புகளை அடுக்க ஆரம்பித்தேன். அதே பரவசத்தோடு. இடைஇடையே என் முதல் திரையுலக குருநாதர் கே.பாக்யராஜ் சார் கையாளும் அதே ஸ்டைலில் என்னுடைய சில சிறுகதைகள், குறுநாவல்களையும் அதை எழுதியது நான் என்று சொல்லாமலே எடுத்துவிட்டு, ரேவதியிடம் அப்லாஸ் வாங்கிக் கொண்ட தருணங்கள் சுவாரஸ்யமானவை.
சின்ன வயதிலேயே நான் வசந்தா டீச்சரிடம் டியூஷன் படிக்கிற போது, அவர்கள் டீச்சர்களாக சேர்ந்து சினிமாவிற்கு போகிற நாட்களில் நாங்கள் அனைவரும் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து நிலாச்சோறு சாப்பிட்டுவிட்டு அரட்டை அடித்துக்கொண்டிருப்போம். அங்கே என்னைத் தவிர எல்லோரும் பெண்கள். அவர்கள் என்னை கதை சொல்லச்சொல்லி சூழ்ந்து உட்கார்ந்து கொள்வார்கள். நான் பார்த்த திரைப்படத்தின் கதையை என்னோட ஃபிளாவர் கொஞ்சம் தூக்கலாகவே சேர்த்து அந்தந்த கதாபாத்திரமாகவே என்னை உருவகித்துக்கொண்டு கதைப்பேன். அவர்களும் மெய்மறந்து ம் கொட்டிக்கொண்டு கேட்பார்கள்.
அந்த கதை தான் இங்கேயும்.. எழுத்தாளர் வாஸந்தி குழந்தை போல அத்தனையையும் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தவர், என்னுடைய நாவலை கூட ஜெயா தொலைக்காட்சி நெடுந்தொடருக்கு கேட்டிருக்கிறார்கள். நீங்கள் திரைக்கதை, வசனம் செய்ய முடியுமா என்று கேட்டார். வாஸந்தியின் சில நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஜனனம் மிகவும் பிடிக்கும். கூடவிடே அவரின் மூங்கில் பூக்கள் என்று நினைக்கிறேன். சரி என்று புன்னகைத்தேன்.
எனக்கு தனி அறை ஒதுக்கித் தந்தார் ரேவதி. எல்லா வசதிகளோடும். நான் இயல்பிலேயே வேகம். திரைக்கதை, வசனத்தை சில நாட்களுக்குள்ளாகவே எழுதி முடித்துவிட்டேன். முதலில் நான் திரைக்கதை, வசனம் எழுதியது எழுத்தாளர் சுஜாதாவின் டி.என்.ஏ என்கிற கதைக்கு. அந்த டெலிஃபில்மில் ரேவதியே கதாநாயகியாகவும், இயக்குநராகவும் பணியாற்றினார். உடன் தேவதர்சினி, மேஜர் சுந்தர்ராஜன் போன்றவர்கள் நடித்தார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு சாந்தோமில் இருக்கிற கல்பா ஹவுசில் நடந்தது.
அப்போது தான் சுரேஷ் மேனனை புரிந்து கொண்டேன்.அவரை அலுவலகத்தில் ஒரு முறை பார்த்தபோது எழ யத்தனித்தேன். ஒரு மரியாதை நிமித்தம். அவர் புன்னகையோடு விஷ் பண்ணாமல் கடந்து சென்றுவிட்டார். நான் முதுகலை படித்த அமெரிக்கன் கல்லூரியில் கூட ஆசிரியர்கள் விஷ் பண்ண வேண்டாமே.. ஹலோ.. ஹாய் சொன்னால் போதுமே என்று தான் பழக்கியிருந்தார்கள். இருந்தாலும் இந்த சமுதாயம் இடையில் நிறைய குப்பைகளை திணிக்கிறதே.. அதனால் பிடிக்காமலே கூட இந்த சமுதாயத்தின் நிர்பந்தத்திற்காக ஒப்புக்காக சில காரியங்களை உயிர்ப்பில்லாம் செய்து கொண்டு தானே இருக்கிறோம்..
படப்பிடிப்பில் ஒரு நாள் ரேவதிக்கு அலர்ஜி ஆகிவிட, மாத்திரை போட்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒரு அறையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறேன் என்று படுத்துவிட்டார். அந்த தருணத்தில் சுரேஷ் மேனன் தான் இயக்கினார். திடீரென என்னை பெயர் சொல்லி அழைத்தார்.. கணேஷ் கதாபாத்திரம் என்ன தேவையில்லாமல் தமிழ் வசனங்களை எல்லாம் ஆங்கிலத்தில் தானே மாற்றிமாற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.. நீங்கள் எத்தனை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.. நீங்கள் எழுதியிருப்பதை அப்படியே பேசச் சொல்லுங்கள்.. அது தான் யதார்த்தமாக இருக்கிறதே என்றார்.
எனக்கு ஒரே ஆச்சர்யம். என்னோடு ஒரு வார்த்தை கூட இது நாள் வரை பேசியிருக்கவில்லை. ஒரே ஒரு புன்னகை மட்டுந்தான் எங்களது உரையாடலாக இருந்திருந்திருக்கிறதாக நான் நம்பிய்ருக்கிற அந்த நேரத்தில், மௌனமாகவே என்னின் அத்தனையையும் கவனித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறார். அவரின் மௌனங்கள் அத்தனை அழகானவை. அத்தனை கண்ணியமானவை.. அத்தனை வசீகரமானவை.. அவர் ஒரு திரைமொழி.. பேசாமல் உணர்த்துகிற மனிதர்.
பின்னாளில் அவர்கள் இருவரும் பிரிந்து விட நேர்ந்தாலும் அவர்களுக்கிடையேயான நட்பு அப்படியே தான் இருந்தது. எழுத்தாளர் ஞானிகூட தன்னுடைய மனனைவியிடமிருந்து மணவிலக்கு பெறுகிற நாளை ஒரு விழாவாக சேர்ந்து கொண்டாடினார். ஒரு உறவு பிரிய வேண்டியதாக இருந்தால் கூட அதற்கான மரியாதையை தருவது அந்த உறவுக்கு தருகிற மரியாதை மட்டுமல்ல.. நாகரீகம்.. அப்படித்தான் பின்னாளில் ரேவதி அபிஷேக்பச்சன், சல்மான்கான், ஷில்பா ஷெட்டியை வைத்து இயக்கிய எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய இந்தி படத்தின் அறிமுக விழா திரையிடலோடு சத்தியம் தியேட்டரில் நடந்தபோது இருவருமாக சேர்ந்து தான் பிரிந்த பிறகும் அந்த விழாவை நடத்தினார்கள். உறவுகளை நாம் மாற்றி வாழ்ந்து பார்க்கலாம் என்று தோன்றுகிறபோது அதை செயல்படுத்த இத்தனை நாகரீகத்தோடே யத்தனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சிறிதும் சிராய்ப்போ, வலிகளோ இல்லாமல் அப்போதும் அவர்களால் நடந்து கொள்ள முடிகிறதில் அவர்களுக்கான உறவின் கௌரவம் ஸ்தாபதம் கொள்கிறது.
எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் நான்காம் ஆசிரமம் சிறுகதையை நண்பர் மூன்றாம் அரங்கு கருணாபிரசாத் நவீன நாடகமாக மேடையேற்றியிருந்தார். அதில் வரும் நாயகியின் கதை அப்படியே பெண் வடிவ ஆட்டோகிராஃப். மூன்றாவதாய் தனது புரபஸரை தன்னைவிட இருபது வயது அதிகமானவரை திருமணம் செய்து கொள்வார். பின்னர் ஒரு கட்டத்தில் அதிலிருந்தும் விடுபட்டு, தனிமை ரசிக்க விரும்புவார்.. ஆனால் அவர் ஒவ்வொரு கட்டத்திலும், யாரையும் காயப்படுத்தாமலே அந்த நகர்வை நகர்த்துவார். அவரின் ஒவ்வொரு கணங்களும் பரவசங்களால் நிரம்பியவை. அர்த்தமுள்ளவை. அந்த முடிவை அவர் புரபஸரிடம் தெரிவிக்கிற தருணங்கள் கூட அத்தனை இயல்பாய் யாரையுமே காயப்படுத்த தெரியாத ஒரு ஆன்மம் எப்படி தன் தேடலை வெளிப்படுத்துமோ அப்படியாகவே இருக்கும்.
டிஎன்ஏ படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னால் எழுத்தாளர் சுஜாவோடு நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு கிடைத்தது. தொலைபேசியில் நேரம் மறந்து அவரோடு பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். ஏற்கனவே பூர்ணம் விஸ்வநாதன் என்னுடைய எழுத்துகளை படித்து, எனக்கு பிடித்த புத்தகங்கள் என்று என்னை பற்றி தினமணிக்கதிரில் கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் கமலிடமும், சுஜாதாவிடம் என்னை பற்றி முன்பே சொல்லியிருக்கிறார். அதை நினைவு படுத்திக்கொண்டு எங்களின் உரையாடல் தொடர்ந்தது. அவரிடம் அவரது கதைகள் பற்றி பல விசயங்கள் சொன்னேன்.. கேட்டேன்… பெற்றேன்.. அப்போது அவர் மீடியா ட்ரீம்ஸில் இருந்தார்.
படப்பிடிப்பு தளத்தில் ஒரு கட்டம் மிகமிக நுட்பமான தருணமாக இருந்தது. கதைப்படி நாயகியாக நடிக்கும் ரேவதி ஒரு சேரிப்பெண். அவருக்கு பிறந்த குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் மாற்றி ஒரு குழந்தையில்லாத வசதியான தம்பதியருக்கு தந்து விடுகிறது. சமூகசேவகியான தேவதர்சினி ரேவதி தன் குழந்தையை மீட்கிற போராட்டத்தில் சட்ட ரீதியாக துணை நிற்கிறார். இப்படியாக நகரும் அந்த கதை. இதில் அந்த மருத்துவமனை தலைமை நிர்வாகியாக மேஜர் சுந்தர்ராஜன் நடித்திருப்பார்.
ஒரு கட்டத்தில் ரேவதியின் ஜாக்கெட்டிஙர மார்பின் மையப்பகுதியில் குழந்தை இல்லாமலே தன்னை மீறிய தாய்மையில் சுரக்கும் பால் நனைத்திருக்கும்.. நிஜவாழ்வில் ரேவதிக்கு குழந்தை இல்லை என்பதால் அந்த காட்சியை தவிர்க்கலாமே என்று மற்றவர்கள் கருதினார்கள். ஆனால் ரேவதி சிறப்பாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தார்.
இந்த இடத்தில் துவக்கத்தில் சொல்வதாய் சொல்லியிருந்த அந்த ஒரு விசயத்தை சொல்ல வேண்டும். அது ஒரு அரிதான குணம். அதை ரேவதியிடம் பரிபூரணமாய் தரிசித்திருக்கிறேன். அதை ரேவதியின் தனித்தன்மை என்றும் சொல்லலாம்.
என்னுடைய திரைப்படகலாசாலையில் எனக்கு திரை இலக்கணத்தை தெளிவாக, எளிமையாக கற்றுக்.கொடுத்தவர் தரையில் இறங்கும் விமானங்கள் தொலைக்காட்சி தொடரை இயக்கிய ராஜன் சர்மா. இப்போது இவர் ஈஞ்சம்பாக்கம் திரைப்படக்கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். கிட்டத்தட்ட அப்படியானவொரு எளிமையான இலக்கணத்தையே இயக்குகையில் ரேவதி கையாண்டார். அதனால் நாங்கள் சேர்ந்து இயங்குவது அத்தனை லெகுவாக இருந்தது. மேலும் சொல்லப்போனால் யாரிடமுமே அத்தனை எளிதில் இருக்காத ஒரு சுபாவம் ரேவதியிடம் இருந்தது. யாராவது எடுக்கிற விசயத்தில் ஒரு தவறை சுட்டிக்காட்டினால் மற்ற இயக்குநர்களாக இருந்தால் மிகவும் அவமானகரமான விசயமாக அதை எடுத்துக்கொண்டு எதிர்வினை ஆற்றுவார்கள். ரேவதி அதற்கு நேர்எதிர்.
ஒரு முறை மேஜர் சுந்தர்ராஜனுக்கு இரண்டு பக்கமும் ட்ராலி போட்டு அந்த காட்சியை எடுத்துக்கொண்டிருக்கையில் லுக் மாறிவிட்டது. உடனே நான் அவரிடன் அதை நினைவு படுத்தினேன். உடனே எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று கேட்கவும், 180 டிகிரி ஃபார்முலா படி வரை படமாய் போட்டுக் காட்டினேன். உடனே அந்த ஷாட்டை ரீஷுட் பண்ணினார் மாறாத புன்னகையோடு. தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவராக ஒரு நாளும் அவர் நினைத்து பார்த்ததேயில்லை. சினிமா ஒரு டீம்வொர்க் என்பதை நூறு சதவீதம் புரிந்து வைத்திருப்பவர். நல்ல விசயம் எந்த பக்கம் இருந்து வந்தாலும் அதை இன்முகத்தோடு, தட்டிக்கொடுத்து, பரவசத்தோடு வரவேற்கிற அந்த குணத்தை அவரிடமிருந்தே கற்றுக் கொண்டிருக்கிறேன்.
படிப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் வேலை துவங்கியது. அவர்கள் தேவி ஸ்ரீதேவி ப்ரிவியூ தியேட்டரை ஒத்திக்கு எடுத்திருந்தார்கள். அதன் மேலே தான் எடிட் சூட் இருந்தது. இரவு பகலென விடியவிடிய எடிட்டிங்கில் ஈடுபட்டிருந்தேன். அத்தனை உற்சாகம். அதில் நான் ஒரு புதிய உத்தியை கையாண்டிருந்தேன். பெரும்பாலான இடங்களில் உரையாடல்களை நேரடியாக காட்டாமல், அந்த உரையாடல்களை எதிரேயிருக்கிற நடிகரின் எக்ஸ்பிரஷன் மீது ஓவர்லேப் செய்கிற விதத்தில் கட் செய்திருந்தேன்.
திடீரென ராத்திரி இரவு ஒரு மணி இருக்கும். தன்னந்தனியாக ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து ரேவதி அன்றலர்ந்த ரோஜா போல அப்போது தான் தலைக்கு குளித்து கூந்தலை போனி டெய்ல் போல தூக்கி கிளிப் செய்து கொண்டு ஜம்மென உற்சாக புன்னகையோடு உள்ளே நுழைகிறார். உடனே அதுவரை எடிட் செய்திருந்ததை பார்க்கலாமா என்றவர், உன்னிப்போடு பார்க்கிறார். பார்த்து முடித்துவிட்டு எடிட்டரை பார்த்து யார் இப்படி எடிட் பண்ணியது என்று கேட்க, எடிட்டருக்கு சற்றே குழப்பம்.. நான் இல்ல மேடம்.. குலசேகர் சார் தான் இப்படி பண்ணச் சொன்னார் என்றார்.. உடனே ரேவதி திரையிலிருந்து விழி நகர்த்தாமலே ‘குட்’ என்கிறார். பிறகு சில நொடிகளுக்கு பிறகு என் பக்கம் திரும்பி கேட்கிறார்.
‘குலசேகர் சாப்ட்டீங்களா..’
‘இனிமேல் தான்..’
‘இன்னும் சாப்பிடலையா.. எழுந்திருங்க..’
‘இந்த ஒரு சீனை முடிச்சிட்டு, சாப்பிட்டுக்கறேன்..’
‘அதெல்லாம் முடியாது.. முதல்ல போய் சாப்பிடுங்க.. அதுவரை நான் பாத்திட்டிருக்கேன்..’ என்றவர் தலையை செல்லமாய் என் முதுகில் முட்டுக்கொடுத்து டைனிங் அறை நோக்கி தள்ளிக்கொண்டு போய்விட்டு வந்தார். அந்த சுறுசுறுப்பு, அந்த எளிமை, அந்த கரிசனம் மறக்கக்கூடியவையா..
டப்பிங் வேலை நடந்து கொண்டிருந்தது. உதவியாளர்கள் அதற்கென இருந்தார்கள். ஆகவே நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். மறுநாள் அதிகாலையில் ரேவதியிடமிருந்து அவசரஅவசரமாய் ஒரு ஃபோன் கால்.
‘உடனே வர முடியுமா?’
‘என்னாச்சி?’
‘அசிஸ்டெண்ட்ஸ் மேஜர் சுந்தர்ராஜனை வச்சி பண்ணின டப்பிங் போர்ஷன் எல்லாமே நான் சிங்க்ல இருக்கறதா சொல்லி, விஜய் டிவி திருப்பி அனுப்பிட்டாங்க.. இவங்களால மேஜர்கிட்ட வேலை வாங்க முடியல.. நீங்க கொஞ்சம் வந்தீங்கன்னா..’
அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே இருந்தேன்.
இந்த வித்தை எனக்கு நன்றாகவே வரும்.
இப்படித்தான் வஸந்த் சார் படப்பிடிப்பு தளத்தில் இந்த இடத்தில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் பயன்படுத்தினால் செயற்கையாக இருக்கும். இங்கேயே உண்மையாகவே ஒரு யதார்த்தமான, ரிச்சான, நாகரீகமான அழகான பெண் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பார். உடனே நான் அங்கே படப்பிடிப்பு பார்க்க வந்தவர்களில் இருந்தோ, அக்கம்பக்கத்தில் இருந்தோ, களையாக இருக்கிற பெண்ணை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் போய் பாந்தமாக ஆங்கிலத்தில் பேசி சம்மதிக்க வைத்து நடிக்க வைப்பேன்.. வைத்திருக்கிறேன்.. நடித்துத் தந்தவர்களை முறையாக நடத்தி, கௌரவத்தோடு அனுப்பி வைத்திருக்கிறேன். அவர்களும் இந்த அனுபவம் மறக்க முடியாத அனுபவம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
அதனால் மேஜர் சாரை எப்படி கையாளலாம் என்று இங்கிருந்து பைக்கில் பறக்கும்போதே திட்டமிட்டுவிட்டேன். போனதும் கலகலப்பாக அவரோடு பேசி, அவரை காயப்படுத்தாமல் அவர் பகுதிகளை இரண்டு மணி நேரத்தில் முழுமையாக, திருப்தியாக எடுத்துவிட்டேன். விஜய் டிவியும் திருப்தி. ரேவதியும் திருப்தி.. நானம் ஹேப்பி.. மேஜரும் செம திருப்தி.. போவதற்குள் ஒரு குழந்தையாக மாறி எந்த ஆட்டிட்யூடும் காட்டாமல் ஆட்டோ என்றால் கூட பரவாயில்லை என்று சொல்கிற இடத்திற்கு இளக்கமாகிவிட்டார். நான் விடாப்பிடியாக காரில் தான் போக வேண்டும் என்று காருக்கு சொன்னேன். காத்திருந்த நேரத்தில் அவரின் திரைப்பட படப்பிடிப்பு அனுபவங்கள் அத்தனையையும் என்னோடு ஆதர்ஸத்தோடு பகிர்ந்து கொண்டார்.
மாதம் 1-ந்தேதி ஆகிவிட்டால் டான் என்று சம்பளம் தந்து விடுவது ரேவதியின் கெட்ட பழக்கம். இப்படித்தான் நான் ஒன்னாந்தேதி போய் பேமெண்ட் பெற்றுக்கொள்ள வேலை நிமித்தம் மறந்துவிட்டேன். உடனே அவர் மிரட்டலாய் ஃபோன் செய்து, சம்பளம் போட்டா வந்து வாங்கிக்க முடியாதோ.. என்ன வேலை செய்யறீங்க அப்படி?? என்று விட்டு சிரித்தார். சம்பளத்தை உடனுக்குடன் வாங்கிக் கொள்ளாதவர்களுக்கு ஃபோன் போட்டு செல்லமாய் கோபித்துக் கொள்கிற ஒரு தயாரிப்பாளராக ரேவதி இருந்ததை நினைக்கிறபோது அந்த மனிதியோடாக செலவிட்ட அந்த இலக்கிய நாட்கள் நினைவுகளில் சிலிர்த்துக் கொள்கின்றன.
அவரின் அநாயாசமான நடிப்பு அவரின் வாழ்க்கையில் நெருக்கடிகளை சந்திக்காத வரை சிறப்பாகவே இருந்து வந்திருக்கிறது. எல்லா கலைஞர்களையும் ஏதோ ஒரு கட்டத்தில் சமூகம் வேட்டையாடி விடுவதை போலவே, அவரும் பின்னாட்களில் சோக நடிககையாக மாற்றப்பட்டுத் தான் விட்டார் என்றாலும், அவரின் துள்ளலான முந்தைய காலக்கட்ட நடிப்புகளில் அவர் எந்நாளும் நித்யஜீவிதம் கொண்டிருப்பார் தான்.

குலசேகர்


வெள்ளி, 26 ஜூன், 2020

Koodal-Tv: முகம் மட்டுமல்ல அகமும் முக்கியம் கப்பேலா-மலையாளம் ...

Koodal-Tv: முகம் மட்டுமல்ல அகமும் முக்கியம் கப்பேலா-மலையாளம் ...: Kappela -  கப்பேலா - சிறிய பிரார்த்தனை இடம்!!! இந்த உலகம் இரண்டுவகையான மனிதர்களை கொண்டது. நல்லவன், கெட்டவன். நல்லவனுக்கும், கெட்டவனுக்க...

முகம் மட்டுமல்ல அகமும் முக்கியம் கப்பேலா-மலையாளம் திரைப்படம் கோகுலின் விமர்சனம்

Kappela -  கப்பேலா - சிறிய பிரார்த்தனை இடம்!!!

இந்த உலகம் இரண்டுவகையான மனிதர்களை கொண்டது. நல்லவன், கெட்டவன்.

நல்லவனுக்கும், கெட்டவனுக்குமான அடையாளங்கள் நாம் நமக்கேற்றப்படி வகுத்திருக்கிறோம்.

உதாரணம்... தாடி வைத்துக்கொண்டு தண்ணி அடித்தால் கெட்டவன், சந்தனப்பொட்டை நெற்றியில் இட்டு அமைதியாய் சிரித்துப்ப்பேசினால் நல்லவன். அதானே?

தனக்கான காரியத்தை சாதிக்க மேல் சொன்ன இரண்டு வகைகளை யார் வேண்டும் செய்வார்கள். வெளிவேஷம் போட்டு ஏமாற்றும் பேர்வழிகள் நம்மை சுற்றியுண்டு.  அப்படிப்பட்டவர்கள் நடிக்கும் நடிப்பில் தோற்றுப்போவது சாதாரண மனிதர்களின் இயல்பு.

வெளித்தோற்றத்தை வைத்து எடைப்போட்டால் தோற்பது நாம்தான். பார்த்தமாத்திரத்தில், பழகிய உடன் எடைப்போடுவதை தவிர்த்து ஆராய்ந்து நிதானமாக முடிவெடுத்தால் பாதிப்பு இருக்காது.

கிராமங்களிலிருந்து நகரம் வரும் சாமானியர்கள் அதுவும் பெண்கள் எனில் உஷாராய் இருக்கவேண்டும்.

நகரத்து பஸ் ஸ்டேண்ட் அல்லது இரயில்வே ஸ்டேஷன்களில் கழுகுப்பார்வையுடன் சுற்றித்திரியும் பிம்ப்களின் வலையில் அப்பாவி ஊர் பெண்கள் சிக்குவது தொடர்கதைதான்.

தண்ணியடித்து, ரவுடித்தனம் செய்து, மொரட்டு பார்வையுடன் இருப்பனுக்குள்ளும் நேர்மை இருக்கலாம்.

சாந்தமாய், புன் சிரிப்புடன் உலவுகிறவனிடத்தில் ஆபத்தும் இருக்கலாம்.

முக்கியமாய், அருகில் இருக்கும் அன்பு புரிவதில்லை தூரத்தில் துரத்தும் துன்பமும் அறிவதில்லை.

சும்மாவா சொன்னார்கள் கண்ணால் கான்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.

அடேய்... கதைக்கு வாய்யா... 🙄🙄🙄

கப்பேலா படம் அதைத்தான் சொல்கிறது.

நேராய் காணாமல் ராங் கால் மூலம் ஃபோனில் பேசி, நட்பாகி காதலிக்கும் ஏழை  கிராமத்துப்பெண், திடீரென்று  திருமணம் ஃபிக்ஸ் ஆக  ஃபோன் காதலனை தேடி நகரத்துக்கு செல்கிறாள்.

காதலனின் மொபைல் தொலைந்தல்துப்போக அணுக முடியாமல் தவிக்கிறாள்.

அவளின் காதலனுக்கும், ஃபோனை எடுத்த மொரட்டு ரவுடிக்கும் எதேச்சையாக மோதல் உண்டாக, காதலன் முரடனை அடித்துவிட கோபத்தில் இவர்களை துரத்துகிறான்.

துரத்திலின் இறுதியில் என்ன நடக்கிறதென்று திரையில் காணுங்கள்!!!

கும்பளாங்கி நைட்ஸ்,  ஹெலன், கூடே, வைரஸ் போன்ற படங்களில் நடித்த நடிகர்கள் அன்னா பென், ரோஷன் மேத்யூ, ஸ்ரீநாத் இந்த  மூன்றுப்பேரை சுற்றி நகரும் கதை.

மார்ச் மாதம் ரிலீசாகி ஹிட் அடித்திருக்கவேண்டிய நல்ல படம் கொரோனாவால் தியேட்டர்கள் மூடியதால் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

சுஷியின் இசை, முஸ்தபாவின் முதல் இயக்கம் என கேரள கிராமங்களின் அழகை கண்முன் நிறுத்தி ஜெஸிக்காக பிரார்த்தனை செய்யவைக்கிறது இந்த கப்பாலே.

இரண்டாவது.பாதியின் இறுதியில் நம்  பல்ஸை எகிறவைக்க  கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும் இந்த இன்னொரு கேரள ஜெஸியும் (முதல் ஜெஸி விண்ணை தாண்டி வருவாயா ஜெஸி 😁😁😁) நம் மனதில் நிற்கிறாள்.

கப்பாலே ( சிறிய பிரார்த்தனை கூடம் அல்லது சிலை) -    நல்லவர்களை தெய்வம் நிச்சயம் ரட்சிப்பான். நம்பிக்கை வைத்தால்!!!

படித்ததில் பிடித்தது

 

சில காயங்கள் "மருந்தால்" சரியாகும்.
சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும்.

" *ஆடம்பரம்* " அழிவைத்தரும். " *ஆரோக்கியம்* " நல்வாழ்க்கை தரும்.

கார் இருந்தால் " *ஆடம்பரமாக* " வாழலாம்
.
மிதி வண்டி இருந்தால் " *ஆரோக்கியமாக* " வாழலாம்.

" *வறுமை* " வந்தால் வாடக்கூடாது.
" *வசதி* " வந்தால் ஆடக்கூடாது.

 *வீரன்*  சாவதே இல்லை.
" *கோழை* " வாழ்வதே இல்லை.

தவறான பாதையில் " *வேகமாக* " செல்வதைவிட.

சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள்.

மனிதனுக்கு ABCD " *தெரியும்* " ஆனா *"Q"* ல போகத் "தெரியாது".

எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனா *"Q"* ல போகத் "தெரியும்".

ஆயிரம் பேரைக்கூட " *எதிர்த்து* " நில்.
ஒருவரையும் " *எதிர்பார்த்து* " நிற்காதே.

தேவைக்காக கடன் " *வாங்கு* ".
கிடைக்கிறதே என்பதற்காக " *வாங்காதே* ".

உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது.

பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது.

" *கருப்பு* " மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.

" *சிவப்பு* " மனிதனின் நிழலும் கருப்புதான்.

 *வண்ணங்களில்* " இல்லை வாழ்க்கை.
மனித " *எண்ணங்களில்* " உள்ளது வாழ்க்கை

" *கடினமாய்* " உழைத்தவர்கள் முன்னேறவில்லை.

" *கவனமாய்* " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால்,

அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும்.

*கடனாக* இருந்தாலும்சரி,
" *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.

" *செலவு* " போக மீதியை சேமிக்காதே.
" *சேமிப்பு* " போக மீதியை செலவுசெய்.

உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* " அடைந்தால் சிற்பி.

 உறவினர்களில் யார் முக்கியம் என்பதை " *உயிரற்ற* " பணமே முடிவு செய்கிறது.

கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு " *முட்டாள்* " என்று தெரியும்.

கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
" *புத்திசாலி* " என்பது புரியும்.

பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " *போற்றும்* ".

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி
" *தூற்றும்* ".

பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " *பொய்* ".

அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " *உண்மை* ".

 கவலைகள் கற்பனையானவை.
" *மீதி* " தற்காலிகமானவை.

குறைகளை " *தன்னிடம்* " தேடுபவன் தெளிவடைகிறான்.

குறைகளை " *பிறரிடம்* " தேடுபவன் களங்கப்படுகிறான்.

அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " *உண்டு* ".
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " *இல்லை* "
விழுதல் என்பது " *வேதனை* ".
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " *~சாதனை*~ "

*ஆனந்தம் ஆரோக்கியம்!!!*

வியாழன், 25 ஜூன், 2020

பாடல் சொல்லும் பாடம் - பாலகணேசனின் பார்வை


"ராஜராஜ சோழன் நான்..
என்னை ஆளும் காதல் தேசம் நீதான்.."ங்கிற வரியை கேட்குறப்ப எல்லாம் திரும்ப திரும்ப யோசிக்கிறேன். இதை என்ன மனநிலையில, என்ன அர்த்தத்துல கவிஞர் மு.மேத்தா எழுதியிருப்பாருனு புரியல. அதாவது நான் ஒரு காதல் தேசம்.. என்னை ஆளும் ராஜராஜ சோழன் நீ"-ன்னுதான அது இருந்திருக்கணும்? ராஜா நாட்டை ஆளுறதுதானே முறை? அதான உருவகம்? அப்புறம் எப்படி ஒரு காதல் தேசம், ஒரு அரசனை ஆளும்? இதென்னடா லூசுத்தனமா இருக்கு அப்படின்னு மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்துட்டே யோசிச்சிட்டிருக்குறப்பதான் பல எண்ணங்கள் உள்ளாடுது.

எல்லா காதல்லயும் ஆண்களோட ஆளுமையும், டாமினேஷனும் இருக்கும். அதை மனசார ஏத்துக்குற பெண்களும் உண்டு. பெண்கள் தங்கள் மனசுக்குள்ள இவன் என்னோடவன்னு கற்பனை பண்ண, ஆணோ அதை தம்பட்டம் அடிப்பான். "அவ என்னை ஆளுறா மச்சான்"ன்னு ஒருத்தன் பிரஸ்தாபிப்பான்-ல. அதை கவிஞர் இப்படி சொல்லி இருக்காரு  போல. என்னதான் நான் ராஜராஜ சோழனாவே இருந்தாலும் கூட நான் என் தேசமாகிய உன்னை ஆட்சி செய்யல. நீதாண்டி என்னைய வச்சி செஞ்சிட்டிருக்கன்னு. ஒரு பாடல் திறந்துவிடும் புதுக்கதவுகள் கணக்கிலடங்காதது. இந்தப்பாடல் அப்படி ஒரு மேஜிக் பண்ணியிருக்கு.

"மண்மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே..
உல்லாச பூமி இங்கு உண்டானதே.." -ன்னு பெண்ணை சொர்க்கத்தோட ஒப்பிடும் ஆண் அவன். சொர்க்கம் மேல் லோகத்துல இருக்குன்னு சொன்னாலும் கூட, பெண்ணின் இருப்பு பூமியில இருக்குறதால பூமியும் உல்லாசமா ஆயிருதுல்ல? ஆக மண்ணிலும் சொர்க்கம்.. விண்ணிலும் சொர்க்கம். கணக்கு சரியாயிருச்சி.

"கண்ணோடு கண்கள் ஏதும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே " - கற்பூர தீப உதாரணம் பத்தி பேசணும். மற்ற எல்லா விளக்குகளையும் விட கற்பூரம் கொளுத்துறப்போ வர்ற  ஒளியை நான் ரொம்ப ரசிப்பேன். என் கைகளால் நான் ஏற்றிய தீபம். அது எறிஞ்சி முடிக்கிறதுக்குள்ள ஒரு தாண்டவம்  ஆடிரும். காற்றின் திசையை மாற்ற நினைக்காம, அந்த திசையோடே பயணித்து, ஒரு முழுமையான வாழ்வு வாழ்ந்துட்டு மறையும். வாசமும் தரும். அந்த வாசனை அது மறைஞ்சு போனபின்னும் கொஞ்சம் இருக்கும். கற்பூர தீபம்ன்னு சொல்றது எவ்ளோ பொருத்தம்!

"உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்.." - என்னதான் ஆயிரம் நெருக்கம் வந்தபின்னாலும் கூட ஒரு சின்ன நாடகத்தன்மை இருந்துட்டே இருக்கும் நம்மகிட்ட. அது அழகாவும் இருக்கும். அதுவும் பூமிங்கிற உல்லாச மேடையில நடக்குற இந்த ஓரங்க நாடகம் எப்பவுமே சுகமானது. ஏன்னா அவ இன்பங்களை பாடமாக்கி கத்து தரும் என் தாயகம். அவளை ரசிக்கிறதுங்கிறது அவளை மட்டுமே ரசிக்கிறது இல்ல. அவ நிறைஞ்சி நிக்கிற இந்த பூமியையே ரசிக்கிற மாதிரி. அதுல இருக்குற ஒவ்வொரு பொருளையும் நேசிக்கிற மாதிரி.

"இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசைத்தீயில் நான் வேகிறேன்..
உன் ராக மோகனம்
என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை
என் ஆவி நீயே தேவி... -  இது ஒரு சிரமமான பருவம் மற்றும் காரியம். என்னதான் இருந்தாலும் அலைபாயும் மனசு. காதல்ல அதை கட்டுப்படுத்தவே முடியாது. எனக்கனவா இவன்னு முடிவான பிறகும் கூட சில தயக்கங்கள் இருக்கும். ஊஞ்சல் ஆடுற மாதிரி. அதேநேரத்துல அந்த ஊஞ்சல் ஆடுற சமயத்துலயும் உள்ள இருந்து குதிச்சி எப்படா நோக்கத்தை வெளிப்படுத்தலாம்னு ஒரு தீ கனன்று எரிஞ்சிட்டே இருக்கும். அதுக்கும் காதலே காரணம். ஏன்னா அவன் பயணிக்கிற வாகனமே அவளோட குரல் வழியா வழியிற அந்த ராக மோகனம்தான். எப்பவுமே கூடவே இருக்குற அவ குரலேதான் இந்த ஊஞ்சலாட வைக்கிறதையும் பண்ணுது... ஆசைத்தீயில வேகவும் வைக்குது. ஏன்னா அவ அவனோட செந்தாமரை.. செந்தேன் மழை.. அவனோட ஆவியா இருக்கும் தேவி.

"கள்ளூர  பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே..
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே.." - அப்படினு சொல்றப்பவே அவன் ஏன் அவமேல இவ்ளோ பைத்தியமா இருக்கான்னு புரிஞ்சிக்கலாம்.  இதுலயும் ஒரு பெரிய கேள்வி இருக்கு எனக்கு. அது கல்லூற-வா இல்ல கள்ளூற -வா? ரெண்டுமே இங்கே பொருத்தமா இருக்கு. கல்லையே ஊற வைத்து அதை கரைக்கும் பார்வைன்னு வச்சிக்கலாம். இல்லைன்னா பனைமரத்துல இருந்து சுடச்சுட இறக்குன ஊற வச்ச கள் தர்ற போதை போன்றது அவளது பார்வைன்னு வச்சிக்கலாம். எப்படி பார்த்தாலும் நம்ம பிசினஸ் சக்சஸ்தான்.  அதுமட்டுமா அதே கண்கள் சில சமயம் வில்லுல பூட்டுன அம்பா என்னை குறிபார்த்து கொல்லுதாம். ஆகமொத்தம் அவள் கண்களால் மரணம். காதல் மரணம்.

"முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே..
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே.." -ன்னு சும்மா பாடிட்டு போயிர்ராரு கவிஞர். என் நிலைமை தர்மசங்கடமா இருக்கே. செல்வாக்கிலே-ங்கிற வரியை எப்படி மொழிபெயர்த்தாலும் அது அளவே இல்லாம நீளுது. ஆமா... அவள் செல்வாக்கு மிகுந்த தனங்களை உடையவள். அதை வெளியில் இருந்து பார்க்கும்போதும் கூட அந்த கண்கள் ரெண்டு மட்டும் ஒரு பல்லாக்கு பயணமே போகுது. மீள முடியாத சிறை அவள் முந்தானை. அதைவைத்து அவள் மூடியது எதுவானாலும் சரி.. அவன் அங்கேயே இருக்க சம்மதம்ன்னு சொல்றான்.

"தேனோடை ஓரமே நீராடும் நேரமே..
புல்லாங்குழல் தள்ளாடும்
பொன்மேனி கேளாய் ராணி.." -அபப்டினு முடிக்கிறார் பாட்டை. தேன் சிந்தும் அவ்வோடையில் நீராடும் பொழுதுகளில் தள்ளாடுதடி என் புல்லாங்குழல்-ன்னு எழுதப்பட்ட ஒரு புதுக்கவிதைதான் இது. அப்பட்டமான ஒற்றை அர்த்தம் கொண்டது. இதைவிட அழகா சொல்லிரவும் முடியாது. ஏன்னா காதல் அதை பேரழகாதான் பார்க்கும். அப்படிதான் அது கத்து கொடுத்திருக்கு. தள்ளாடிய புல்லாங்குழல் அந்த நொடிக்கு முன்புவரை கொண்டாடி இருக்கும் தேனோடையை.  அப்ப அந்த தள்ளாடல் தற்காலிகம்தான். பயபப்ட்ட தேவையில்லை. மீண்டும் புல்லாங்குழல் இசைக்கும்.

இதை உருவாக்கி கருவாக்குன பாலுமகேந்திரா-ங்கிற கலைஞனை  பத்தியெல்லாம் நான் என்னத்த புதுசா சொல்ல? இதை பாடுன யேசுதாஸை உச்சி முகரனும். இளையராஜாவை இன்னும் இன்னும் கேட்டு அனுபவிக்கனும். வாழ்க்கை நிறைவுறும்.


பால கணேசன்

செவ்வாய், 23 ஜூன், 2020

வைதேகி காத்திருந்தாள் வானுயுற காதல் சொன்னாள்

வைதேகி காத்திருந்தாள் (1984)

#விஜயகாந்த் #Tamil #Movie #Youtube

ஒரு படத்துக்கு ஏற்கனவே ரெடியா இருக்குற பாடல்களுக்கு ஏத்த மாதிரி ஒரு கதை எழுதி அதுல ஒரு மாஸ் ஹீரோவா கொஞ்சம் சாப்ட் கேரக்டர்ல நடிக்கவச்சு படம் எடுத்த படம் ஓடுமா ? ஓடாத ? என்கிற  கேள்விக்கு பதில் தான் இந்த வைதேகி காத்திருந்தாள்.

எல்லோரும் இந்த படம் ஓடினத்துக்கு முழுக்க முழுக்க காரணமாக சொல்வது இளையராஜாவையும் விஜயகாந்தயும் கண்டிப்பாக உண்மை தான், அந்த பாடல்கள் இல்லாம இந்த படம் இல்ல தான். ஆனால்
R சுந்தராஜன் என்கிற டைரக்டர் இல்லாட்டி இந்த படம் பத்தோட பதினொன்னாகி போயிருக்கும்.

படத்தில ரெண்டே விஷயம் தான் ஒருத்தி தண்ணியில்லாம சாவுற அதனால வெள்ளைச்சாமி (விஜயகாந்த்) என்கிற ஒருத்தன் ஊமையாகி தான் ஊரை விட்டு எதோ ஒரு ஊருல மத்தவங்களுக்கு தான் எந்த தண்ணியால கஷ்டப்படமோ. அதே தண்ணியால  வேற யாரும் கஷ்டப்படக்கூடாதுனு தண்ணிய  தூக்கி வீடு வீடு கொண்டு சேக்குறன்.

இந்த தண்ணிக்கும் வெள்ளைச்சாமிங்கிற இந்த பேருக்கும்  எப்போவுமே ஏழாம் பொருத்தம் தான் போல (தண்ணீர் தண்ணீர் படத்தில் வரும் கேரக்டரும் வெள்ளைச்சாமி தான்...) . தான் இனி வைதேகி கிட்ட மட்டும் தான் பேசுவேன் ராத்திரி அவளுக்காகவே பாடுறான்.

அதே தண்ணியால வைதேகி (ரேவதி) கல்யாணம் ஆன கொஞ்ச நேரத்துலே இனிமே பூவும் பொட்டும் வச்சுக்க முடியாத நிலைமையை தந்துருது.அப்போ ஒரு கைம்பெணடா கஷ்டத்தை பத்தி ரொம்ப அழகா சொல்லியிருக்கும் இந்த படம்.

படத்தின் கதையானது ஊருக்கு வேலை தேடி வருற  நட்ராஜ் (சிவன்குமார்) அங்க கோயிலை செங்கமலம் (கோகிலா) மொத தடவையை பாத்ததுமே காதல் உருவாயிருது. அதுக்கு பிறகு வைதேகி வீட்டில அவங்க அப்பாவால் வீட்ல வாடகைக்கு அமர்த்தப்பட்டு அங்கு உள்ள ஒரு ரேஷன் கடையில வேலை செய்யறான்.

இவங்க ரெண்டு பேரும் காதல் செய்ய அது அவங்க அண்ணன் அந்த ஊரில் இருக்கும் ரவுடி "வெள்ளிக்கிழமை ராமசாமி" (ராதாரவி) தெரிய செங்கமலத்தை அடச்சி வச்சுடறான். அவங்க காதல் சேர முடியலன்னு அவங்க ரெண்டு பேரும் சாக முயற்சி செய்றாங்க அது தெரிஞ்சு வைதேகியும், வெள்ளைச்சாமியும் அவங்கள காப்பாத்துனாங்களா ? அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்த்தங்களா இல்லையா ? என்பது தான் கதை

படத்தில் விஜயகாந்த் ரேவதியும் மீட் பண்ணி பேசும் போது அவங்களோட பிளஷ்பாக் சொல்லற விதம் அந்த ஊர்ல மொத தடவையை அவன் வைதேகிக்கிட்ட மட்டும் தான் பேசுறான். விஜயகாந்த் அந்த ஜிப்பாவையும் அந்த கிழிஞ்ச பேண்ட்டையும் ஏன் போட்டுட்டு இருக்காரென்பது கூட அந்த பிளஷ்பக் மொத சீன்லேயே சொல்லிடுவார்.

விஜயகாந்த் பிளஷ்பக் சீன்ல மாமா பொண்ணா வர வைதேகி (பிரமிளா ஜோஷி)  ரொம்பவே சூப்பர். அவங்க மாமா நிறத்தைவிட தான் நிறம் அதிகமா தெரியக்கூடாதுனு அவங்க உச்சி வெயிலில் நிக்கறது அப்போதேயே முறை பெண்களின் மொத்த உருவம். கூடவே வர அந்த சின்ன பையன் (டிங்கு) ஒவ்வொரு தடவை "போங்கடி நீங்களும் உங்க கல்யாணமும்" சொல்றத கேக்கும்போது #90கிட்ஸ் காகவே சொன்னது போல இருக்கு.

படத்தில் சொல்லவேண்டிய இன்னொரு மிகப்பெரிய பலம் இந்த ஆள் இன் ஆள் அழகுராஜாவும்  (கௌண்டமணி)  கொம்முட்டி தலையானா (செந்தில்) செய்யுற காமெடியெல்லாம் எவர் க்ரீன் சீன்ஸ். இப்போ பார்த்த கூட சிரிப்பை நிறுத்தமுடியாது. பெட்டர்மாஸ் காமெடி, அல்வா காமெடிஎல்லாம் வேற லெவல்.

இசை இளையராஜா படத்தில மொத்தம் ஆறு பாட்டு ராசாவே உன்ன... சுசிலா அம்மா பாடுற பாட்டையும்  சேர்த்து எல்லாமே எவர் க்ரீன் ஹிட்ஸ். ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு எப்போ கேட்டாலும் அந்த படிக்கட்டுல விஜயகாந்த் பாடுறது நினைவுக்கு வரும்.  நானும் இந்த பாட்டை SPB பாடுனதா நெனச்சுட்டு இருத்தேன் ஆனால் பாடுனது P ஜெயச்சந்திரன் அவர்கள். படத்தில் வரும் எல்லா பாட்டுமே சிங்கிள் லவர் (POV) சாங்ஸ்.

இந்த ராசாத்தி உன்னை... பாட்டை MSV இசை அமைத்த சிங்கார புன்னகை பாட்டுலேர்ந்து இன்ஸ்பயர் ஆகி எடுத்து இருக்காங்க. அதை MGR கண்டுபிடிச்சு கேட்டதா கங்கை அமரன் ஒரு இன்டெர்வியூல சொல்லி இருக்கிறார். நீங்களும் கேட்டு பாருங்கள் உங்களுக்கும் புரியும்.

படத்தின் கிளைமாக்ஸ் ரொம்பவே கடினமான ஒன்று பார்க்கும் போதே மனசு கனக்கும். படத்தின் டைட்டில்க்கு ஏற்றவாறு ஒரு கேள்விக்குறியோடு கடைசியில் முடித்து இருப்பார்கள்.  எனக்கு படம் பார்க்கும் போது ஒரே கடுப்பு அந்த நட்ராஜ் கேரக்டர் மேல ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிச்சுட்டு இருக்கும் போது வைதேகிக்கு ஒரு நம்பிக்கை குடுப்பது மாதிரி வரும்.

ஒரு பெண் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் போக கூடாதுனு சொன்ன இந்த படத்துல ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு (பால்ஸ் ஹோப்) பொய்யான நம்பிக்கை கொடுப்பதும் பெரிய குற்றம் தான் என்பதை சொல்லாம விட்ருப்பாங்க. படம் பார்க்காதவர்கள் நிச்சயம் பாருங்கள் ஒரு கிளாசிக் ரொமான்ஸ் படம் youtubeல் காணக்கிடைக்கிறது.
உங்கள் நேரத்தினை செலவிட்டதற்கு நன்றி !


Karthik egan

ரெட் கார்டு போட்டவங்களுக்கு சாட்டையடி கொடுத்த உழைப்பாளி-1993

1969ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித் தலைவி ஜெயலலிதா நடித்த நம் நாடு படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு பராம்பரிய விஜயா வாகினி ஸ்டூடியோ ஒரு தமிழ் படம் எடுக்க தீர்மானிக்கிறார்கள், அந்தப் படம் தான் "உழைப்பாளி"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு அசாதாரண சூழ்நிலையில் நடித்து பல சிக்கல்களைத் தாண்டி வெளிவந்த படம் உழைப்பாளி.  திரையில் எதிர்ப்புக்களை அதிரடியாக சூப்பர் ஸ்டார் சந்தித்து வெளுத்து வாங்கும் காட்சி தமிழகத்திற்கு ஒன்றும்  புதிது அல்ல.  திரைக்கு வெளியே திரையுலகில் தனக்கு எழுந்த பெரும் எதிர்ப்பு அலைகளைத் தாண்டி ரஜினி தானே வெளியீட்டு வெற்றி கண்ட வரலாறு கொண்ட படம் தான் உழைப்பாளி. விநியோகிஸ்தர்கள் ரஜினிகாந்த்க்கு ரெட் கார்டு போட்டநிலையில் சென்னை ஏரியாவில் ரஜினியின் சொந்த விநியோகம் மூலம் படம் வெளியானது. சென்னையில் பெரு வணிக  வெற்றியும் பெற்றது உழைப்பாளி. படம் வெளிவந்த ஆண்டு - 1993இயக்கம் - பி வாசு இசை - இளையராஜா தயாரிப்பு - நாகி ரெட்டியின் சந்தமாமா விஜயா  கம்பைன்ஸ் ஒளிப்பதிவு - M C சேகர் எடிட்டிங் - மோகன்ராஜ் படத்துக்கு போவோம் வாங்க, ஒரு பெரிய அலங்காரமான வீடு காட்டப்படுகிறது. ஒளிவெள்ளம் பாய வீடு வெளிச்சம் பெறுகிறது, அலாரம் அடிக்கிறது, வீடே சுறுசுறுப்படைகிறது. தமிழரசு எழுந்து விட்டார் என்று பெரும் பரபரப்பு அடைகிறது வீடு. சட்டை... கோட்டு... டை.. என ஒன்று ஒன்றாக சுட்டுக் காட்டுகிறது ஒரு கை.. இறுதியாக கூலிங் கிளாஸ் ஒன்றை விரல் சுட்டி எடுத்து மாட்டி கண்களால் தன் ரசிகர்களுக்கு வணக்கம் வைத்து அறிமுகம் ஆகிறார் நம் சூப்பர் ஸ்டார். 90களில் சூப்பர் ஸ்டாரின் மாஸ் தூக்கலான படங்கள் வந்துக் கொண்டிருந்த நேரத்தில் உழைப்பாளி கொஞ்சம் 80கள் சாயல் கொண்ட ரஜினி படமாகவே வந்தது. அண்ணாமலையில் கொண்டு வந்த SUPER STAR முத்திரை இசை எல்லாம் இதில் கிடையாது. அறிமுகக் காட்சிக்கு மீண்டும் போவோம்.  மிடுக்கான உடுப்பில் சரசரவென தமிழரசாக ரஜினி படிகள் இறங்கி வர, அவரை வரவேற்க ராதாரவி, நிழல்கள் ரவி  மற்றும் எஸ் எஸ் சந்திரன் ஆகியோர் வரிசை கட்டி நிற்கிறார்கள். அவர்கள் போடும் மாலை, சால்வை என அனைத்தையும் பக்கத்தில் இருக்கும் பணியாளரிடம் ரஜினி படு ஸ்டைலாக கொடுக்கும் இடம் பக்கா சூப்பர் ஸ்டார்த் தனம். அவர் அவ்வாறு செய்வதைப் பார்த்து இது தெரிஞ்சு இருந்தா எல்லாத்தையும் அவனுக்கே ( பணியாளருக்கே) நேரடியாக போட்டு இருக்கலாம்  என்று எஸ் எஸ் அடிக்கும் நக்கல் அவருக்கே உரித்தானது. முறைப்பும் விறைப்புமாக ரஜினி இருக்கிறார்.  அங்கிருந்து காரில் செல்லும் போது காரை நிறுத்த சொல்லி இறங்குகிறார், காரை விட்டு கெத்தா இறங்கி அங்கும் இங்கும் பார்த்து விட்டு ஓட்டம் பிடிக்கிறார்.  அவரைக் காரில் பின் தொடர்ந்து வரும் ராதாரவி சகோதரர்கள் மடக்குகிறார்கள். பார்வையாளர்களுக்கு ஆர்வம் தொற்றி கொள்கிறது. ஆமா ரஜினி யார்?  எதுக்கு அவர் ஓடுறார்?  இவங்க எதுக்கு ரஜினியை மடக்குறாங்க? கேள்விகளுக்குப் பதிலும் உடனே கிடைக்கிறது. ரஜினி ஒரு நாடக நடிகர், அவரை தங்கள் சகோதரியின் அமெரிக்க ரிட்டன் மகனாக நடிக்க அழைத்து வருகிறார்கள்,  அவரிடம் தங்கள் சகோதரியின் நலன் திரும்பவே ரஜினியை அழைத்து வந்ததாக சொல்லி அவரை நம்ப வைக்கிறார்கள்,  ஆனால் உண்மையில் அக்காவின் சொத்தை எல்லாம் ரஜினியை வைத்து குறுக்கு வழியில் அடைய திட்டம் போடுகிறார்கள்.படத்தில் பெரும் நட்சித்திர அணிவகுப்பு இருக்கிறது. சுஜாதா ரஜினியின் புத்தி சுவாதீனம் இல்லாத தாயாராக நடித்து இருக்கிறார். நடிகர் ரவிச்சந்திரன் அவர் கணவராக கொஞ்ச நேரமே வந்து போகிறார்.நடிகர் இயக்குனர் விசு ரஜினியின் குடும்ப வக்கீலாக வருகிறார், அவருடைய உதவியாளராக வரும் கவுண்டமணி காமெடியில் கலக்குகிறார்.கதைப்படி  ரஜினியின் தாய் மாமன்கள் தான் வில்லன்கள். அந்த வேடங்களில் முறையே ராதாரவி, எஸ் எஸ் சந்திரன், நிழல்கள் ரவி வருகிறார்கள்.  ஒவ்வொருத்தரும் தங்கள் ட்ரேட் மார்க் வில்லத்தன நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் வாரிசுகள் வேடங்களில் வருபவர்கள் உதயபிரகாஷ், ரவி,  நாயகி ரோஜா எஸ் எஸ் சந்திரன் மகளாக வருகிறார்.  குஷ்பூவுக்கு பிறகு ரஜினிப் படத்தில் ரோஜாவுக்கு அவர் பெயர் வரும் மாதிரியான ஒரு பாடல் அமைக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கும் ரோஜாவுக்கும் காதல் மட்டும் இல்லை காமெடியிலும் எக்கச்சக்கமாய் பொருந்திப் போகிறது.  குறிப்பாக துணிக்கடையில் துணி மாறி போகும் காமெடி பெரிய ஹிட்டடித்தது.  துணிக்கடை முதலாளியாக அந்த  ஒரு காமெடிக் காட்சியில் வந்த நடிகர்  மதன் பாப்க்கும் நல்ல பெயர் கிடைத்தது ரோஜா ரஜினி பாடல்காட்சிகள் கண்ணுக்கும் காதுக்கும் ஒரு சேர விருந்து படைக்கின்றன. ஸ்ரீவித்யா ரஜினியின் பாசமுள்ள அக்காவாக வருகிறார், அவரது கணவராக நடிகர் விஜயகுமார் நடித்து இருக்கிறார்.  கதையில் இவர்கள் பாத்திரங்கள் முக்கியத்துவம் பெற்றவைகளாக இருக்கின்றன. மீண்டும் கொஞ்சம் கதைக்குப் போவோம் வாங்க மீண்டும் ரஜினியை வீட்டுக்கு கூட்டி வரும் ராதாரவி சகோதரர்கள் ரஜினியைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்,  ஆனால் ரஜினி அவர்களின் கயமையைப் புரிந்துக் கொண்டு அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடி விடுகிறார். ரஜினி திரும்பி தன் அக்கா வீட்டுக்கே வந்து விடுகிறார். விதி வசத்தால் தன்னுடைய சொந்தக் கம்பெனியிலேயே கூலியாக நண்பர்களின் உதவியால்  வேலைக்கு சேர்கிறார். உழைப்பாளியில் இசை இளையராஜா, பின்னணி இசை அவர் மகன் கார்த்திக் ராஜா.  பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன.  மொத்தம் ஏழு பாடல்கள்.அனைத்து பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். எதிர்பாராமல் ரஜினி தன் அம்மாவை சந்திக்கிறார்,  அங்கு தான் யார்?  தன் மாமன்களால் தன்னுடைய தந்தை கொல்லப்பட்டது, தன் தாய் புத்தி பேதலித்து நிற்பது, தன்னைத் தன் சிறு வயதில் தன் மாமன்கள் தன்னைக் கொலை செய்ய  முயன்றது என தன் கடந்தக் காலம் பற்றி அறிந்து கொள்கிறார். வக்கீல் விசு மூலம் தன் மாமன்களின் சதியை வீழ்த்த மீண்டும் தமிழரசு அவதாரம் எடுத்து பெரிய வீட்டுக்குப் போகிறார்.ஒரு பக்கம் தமிழழகன் என்று உழைப்பாளியாகவும்  இன்னொரு பக்கம் தமிழரசன் என்று முதலாளியாகவும் ரஜினி பட்டையைக் கிளப்புகிறார். ரஜினியைக் கூலி என்று நிரூபிக்க ரோஜாவும் அவர் சகோதரர்களும் முயன்று தோற்கிறார்கள்.  ரஜினியின் தாயாருக்கு நினைவு திரும்புகிறது, சொத்தை கொடுத்து விட்டு நாம் எங்கேயாவது போய் விடலாம் என்று ரஜினியிடம் சொல்லுகிறார். ரஜினியாச்சே தோற்று ஓடுவது அவர் படங்களில் நாம் பார்த்து அறியாதது அல்லவா !தன் மாமன்களின் தீயத் திட்டங்களை வீழ்த்தி அவர்களிடம் இருந்து தன் குடும்பம்,  சொத்து, தொழிற்சாலை, தொழிலாளர்கள் எல்லாரையும் ரஜினி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே மீதிக் கதை இயக்குனர் வாசு ரஜினியோடு சேர்ந்த பணியாற்றிய ஐந்து படங்களில் உழைப்பாளியும் ஒன்று. ரஜினி ரசிகர்கள் ரசிக்க சரியான ரஜினி பஞ்ச்க்கள், சண்டைகள், ஸ்டைல்கள் என்று ஒரு பக்கம் நிறைத்து விட்டு மறுபக்கம் குடும்பங்கள் கொண்டாட காமெடி,  அம்மா செண்டிமெண்ட், காதல் என்ற அம்சங்களையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கிறார். வாசு ரஜினிக்கு ஒரு ராசியான இயக்குநர். ரஜினிக்கு என்று அளவெடுத்து திரைக்கதை அமைப்பதில் தான் ஒரு வல்லவர் என்பதை வாசு உழைப்பாளி மூலம் மீண்டுமொரு முறை நிரூபித்து இருப்பார்."உழைப்பாளி இல்லாத நாடு தான்.. "தமிழ் திரையுலம் உழைப்பாளிகளுக்கு செலுத்திய ஒரு உன்னத காணிக்கைப் பாடல் என்று தாராளமாய் சொல்லலாம். பாடலின் படமாக்கமும் பாராட்டும் படி இருக்கும். இந்தப் பாடலில் அக்காலத்தைய ராகவேந்திரா லாரன்சையும் காணலாம். "ஒரு மைனா மைனா குருவி.. " கிளுகிளுப்புடன் கூடிய ஒரு ரஜினி ஸ்டைல் பாடல், இந்தப் பாட்டில் ரஜினியுடன் நடித்த பழைய நாயகி ரூபிணி மற்றும் பல்லவி, ஷாபாகுப்தா அலி ஆகியோர் சரியான ஆட்டம் போட்டு இருப்பார்கள் " முத்திரை இப்போது " இன்னொரு சில்லென்ற பாடல், காதல் பாட்டில் வாலி  "ஏணிகள் ஆயிரம் இங்கு இருந்தாலும் என்றும் ஏழைகள் ஏறிட விட்டதில்லை " என்ற வரியின் மூலம் கொஞ்சம் சமுதாய சிந்தனையும் புகுத்தியிருப்பார். "ஒரு கோலக் கிளி.. " இது ரஜினி மேஜிக் சொல்லும் ஒரு மெல்லிசை பாடல், தெவிட்டாத செவி இன்பம் கொடுக்கும் பாடல் "உழைப்பாளியும் நானே.. " இனிய ஒரு காதல் கிண்டல் சூழ்நிலை பாட்டு, நாயகியிடம் நாயகன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்டம், பாடல் மூலம் பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது."அம்மா அம்மா " இந்தப் பாடல் படத்தில் இரண்டு முறை வருகிறது. பாடகி சுனந்தா குரலில் ஒரு முறையும் பாடகர் எஸ்பிபி குரலிலும் ஒரு முறை ரஜினிப் பாடுவதாக ஒலிக்கிறது.உழைப்பாளி ஒரு மியூசிக்கல் ஹிட். இசையில் உழைப்பாளி எந்த அளவு வெற்றி பெற்றதோ அதே அளவுக்கு காமெடியிலும் பெரு வெற்றி பெற்ற படம் உழைப்பாளி. கவுண்டமணி மட்டும் இன்றி வளரும் நிலையில் இருந்த விவேக், மயில்சாமி, சார்லி போன்றோரும் படத்தில் இருந்தார்கள்.இதற்கு மேல் ரஜினி காமெடிக்கு செய்திருக்கும்  பங்களிப்பு படத்தில் காமெடியை மேலும் பிரகாசிக்க செய்கிறது. காமெடி முத்திரை நிறைந்து இருக்கும் சிலக் காட்சிகளை அசைப் போடுவோமா வெளிநாட்டில் இருந்து வந்தவராக வக்கீலிடம் ரஜினி அறிமுகம் ஆகும் காட்சியில் ரஜினி விசுவிடம் பேசும் ஆங்கிலம் இருக்கே, வெடி சிரிப்பு. விவேக் திருமணம் நடக்க ஜமீன் வேடம் போட்டு செல்லும் ரஜினி கல்யாண வீட்டில் கவுண்டமணி பக்கத்தில் உட்கார்ந்து அவர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல் தெறி சிரிப்பு சிவபெருமான் வேடத்தில் குருக்கள் ஸ்கூட்டரில் ரஜினி அடிக்கும் லூட்டி குழந்தைகளும் கொண்டாடும் கலகல காமெடி. கவுண்டர் அடிக்கும் கமெண்ட்கள் வழக்கம் போல் அடடா ரகம். ஊட்டி ரயில் நிலையம் வாசலில் பஞ்சு மிட்டாய்காரனிடம் பேசும் வசனங்களில் புதைந்து இருக்கும் சமதர்ம சிந்தனை பலே ரகம். ரஜினி - இது ரஜினி படம், அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி படம். ரசிகர்களுக்குப் பிடித்ததைப் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். படத்தில் முதல் சண்டைக்காட்சி ரஜினி இரட்டையார்களோடு மோதும் படி அதிரடியாக  அமைக்கப்பட்டு இருக்கும். அவர் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை தட்டி பறிக்கும் அடியாட்களிடம்,   "கஷ்ட்டப்பட்டு வியர்வை சிந்தி உழைச்ச கூலியைக் கூலியைக் குறைச்சுக்கவும் மாட்டேன், உழைப்பாளிகளை ஏமாத்துறவங்களைப் பார்த்து சும்மா இருக்கவும் மாட்டேன் " தன் மீது ரெட் கார்ட் போட்டவர்களைப் பார்த்து ரஜினி சொல்வதாகவே படம் வெளியான போது பரபரப்பாக பேசபபட்டது. படத்தில் வரும் பெரிய வீட்டின் செட், பழைய சினிமா ரசிகர்களுக்கு இன்னொரு மாபெரும் வெற்றி படத்தின் ஞாபகம் கொடுக்கும், அது புரட்சித் தலைவரின் எங்க வீட்டுப் பிள்ளை தான் அந்தப் படம், "நான் ஆணையிட்டால்.." பாடலில் எம்ஜிஆர் சாட்டை சுழற்றி நிற்கும் அதே போன்ற  படிக்கட்டுகள் உழைப்பாளி படத்திலும் வருவதைக் காணலாம். அந்தப் படிக்கட்டுகளில் வைத்து தான் ரஜினி இன்றளவும் அவர் ரசிகர்கள் குறிப்பிடும் வசனங்களைப் பேசியிருப்பார் என்பதைக் கவனிக்க வேண்டும். "அந்த ஆண்டவன் நேற்று என்னை ஒரு கூலியா வச்சிருந்தான், இன்னிக்கு ஒரு நடிகனா ஆக்கி இருக்கான், நாளைக்கு... "  என்ற படி அந்தப் படிகளில் ஏறிப் போவார்.படத்தின் பிற்பகுதியில், "யார் என்ன சொன்னாலும் ஒருத்தன் எப்படி வைக்கணும் என்பது நம்மை படைச்சவன் தவிர யாருக்கும் தெரியாது " என்ற வசனமும் ரஜினி பேசுவது இந்த படிகளில் தான். படத்தில் உழைப்பின் பெருமை பற்றி ரஜினி பேசும் இன்னொரு வசனமும் கவனிக்கத் தகுந்தது.நன்றாக உழைத்தவன், கல்லைத் தின்றாலும் ஜீரணம் ஆகி விடும்  முள் மேல படுத்தாலும் தூக்கம் வரும், ஆனா டகல்பாஜி வாழ்க்கை நடத்தி வந்தால் பச்சைத் தண்ணீர் குடிச்சாலும் ஜீரணம் ஆகாது பட்டு மெத்தை மேல படுத்தாலும் தூக்கம் வராது. ரஜினி படங்களில் சின்னதாக வரும் காட்சிகளிலும் கூட ரஜினி முத்திரை இருக்கும், அதற்கு உழைப்பாளி படத்தில் அவர் பார்ட்டிக்கு போகும் காட்சியை சொல்லலாம். கிழிந்த ஜீன்ஸ் போட்டுக் கொண்டு கிளப் வாசலில் நிற்கும் வாயில் காவலரிடம் ரஜினி பேசும் காட்சி ஒரு நிமிடத்திற்கும் குறைவானது தான் என்றாலும் அதில் அவர் அள்ளி தெளிக்கும் கருத்துக்கள்  ஏராளம். நான் யாருன்னு கேளு? யார்? கூலி மனுஷன் ஏன் சம்பாதிக்கணும்ன்னு கேளு? நல்லா சாப்பிடுறதுக்கும் நல்லா டிரஸ் பண்ணுறதுக்கும் தான் என் பேண்ட் ஏன் கிழிஞ்சு இருக்கு கேளு? எலி கடிச்சுருச்சு, அதுக்கு அதைத் தூக்கிப் போட முடியுமா, அதான் போட்டு இருக்கேன். நான் யாருடைய சீஷ்யன் கேளு? மகாத்மா காந்தி, அவர் சட்டையே போடாமல் உலகமெல்லாம் சுத்தி வந்தப்போ, அவர் சிஷ்யன் நான் கிழிஞ்சப் பேண்ட் போட்டு உள்ளே போகக் கூடாதா? ஒரு மனுஷன் எப்படி வாழணும் கேளு? மனசுல கவலையும்  உடம்பில் வியாதியும் இல்லாமல் வாழணும் ரஜினி ஜொலிக்கும் காட்சி அது. காமெடி காட்சியில் பகவானுக்கே ரெட் ஆ,  தன்னாலே Green ஆயிடும் என்று ரெட் கார்ட் அரசியல் பேசுவதாகட்டும்,  உதர் மத் ஜாவ் என்று ஸ்கூட்டரில் இருந்து கத்தும் ரஜினியிடம், இங்கே எல்லாம் இந்திப் பேசக்கூடாது, பேசினால் தார் பூசிடுவாங்க என்று சொல்லும் குருக்கள். அதில் வெளிப்படும் திராவிட அரசியல் மீதான எள்ளல், இவை எல்லாம் பக்கா ரஜினி நகைச்சுவை மாத்திரைகள். உழைப்பாளியும் நானே பாட்டு துவக்கம் முன்பு, ரோஜாவை வம்புக்கு இழுப்பார் ரஜினி. தன்னை முதலாளியாக காட்டிக் கொள்ளும் ரஜினியிடம் ரோஜா தான் உழைப்பாளி ரஜினியைத் தான் ரோஜா சொல்லும் இடத்தில் ரஜினியின் முகபாவ மாற்றங்களைக் கவனியுங்கள், நவரசம். படத்தில் ரஜினியின் மேக்அப் கொஞ்சம் முன்ன பின்னே இருந்தாலும் அவரது உடைகள் மிகவும் பிரமாதமாக இருக்கும். கடைசி சண்டை காட்சி சேசிங் காட்சி விறுவிறு என்று இருக்கும், புனித் இசாருக்கும் ரஜினிக்குமான கடைசி சண்டை ஆக்ரோசமாக அமைக்கப்பட்டிருக்கும். புனித் இஸார் அந்தக் காலத்தில் தூர்தர்ஷன் மகாபாரத தொடரில் நடித்து பெரும் புகழ் பெற்று இருந்தார். உழைப்பாளியில் துணை வில்லனாக நடித்திருந்தார். உழைப்பாளியில நடனங்கள் சுந்தரம் மாஸ்டர் அமைத்திருக்கிறார். ரஜினிக்கு ஸ்டைலான முறையில் நடனம் அமைந்த படங்களில் உழைப்பாளியும் ஒன்று. உழைப்பாளி கர்நாடக மாநிலம் மலைப் பகுதியான சிக் மகளுரில் அதிகம் படமாக்கப்பட்டிருக்கிறது. இதை ஓட்டி இயக்குநர் வாசு, ஒரு பேட்டியில் பகிர்ந்த ஒரு சுவாரஸ்ய தகவல். அங்கு ரஜினி உட்பட படப்பிடிப்பு குழுவுக்கு தங்குமிடம் இல்லாமல் போக ஒரு இரவு ரோட்டில் காரிலேயே ரஜினி படுத்து தூங்கி நடித்துக் கொடுத்து இருக்கிறார். அங்கு ஹோட்டலில் சண்டையில் இறங்கிய வாசு, தான் யார் தெரியுமா?  என்று கேட்டுக் கொண்டு நின்ற போது, பின்னால வந்த ரஜினி, நாம் யாருன்னு அவங்களுக்கு தன்னால் தெரியணும், நாம் போய் கேட்டு என்ன ஆகப்போகுது ன்னு நகைச்சுவையாக பொருள் பொதிய சொன்னது இன்னொரு ஹை லைட். உழைப்பாளி - 90களில் வந்த ஒரு சந்தோசமான சூப்பர் ஸ்டார் படம், திரைக்கு வெளியேயும் தான் ஒரு சூப்பர் ஸ்டார் தான் என்று ரெட் கார்ட் வென்று வரலாற்றில் நின்ற ஒரு படம். - தேவ்

திங்கள், 22 ஜூன், 2020

மறக்க முடியாத தமிழ் திரைப்படங்கள்

மூடு பனி (1980)

பெண் பாலியல் தொழிலார்களை கொல்வது 19ம் நூற்றண்டில் அதிகமா காணப்பட்டது அதுவம் ஐரோப்பாவில் JACK the Ripper, Long island serial killer என பல பேர்கள் உலவிய தருணம் அது. இன்றும் அமெரிக்காகவில் ஒரு prostitueஆக இருப்பவர் கொலைசெய்ய படுவதற்கு 200% அதிகம் வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கறது.
சிகப்பு ரோஜாக்கள் (1978) பிறகு வந்த தமிழ் சீரியல் கில்லர் கதைகளில் மிக முக்கியமான படம் மூடு பனி. எழுதி இயக்கியவர் பாலு மகேந்திர. இந்த திரைப்படம் இரண்டு நாவல்கள்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுஉள்ளது. இதுவும் ஒரு விடுதலை மற்றும் The Collector.
கதையானது விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் மீது அதீத வெறுப்பு காரணமாக அவர்களை கொல்லும் எண்ணம் மேலோங்கும் சந்துரு (பிரதாப் பொத்தன்) பெங்களூரில் இருக்கிறான். அவனுடைய தாய் தந்தை இழந்து தனிமையில் வாழும் ஒரு பணக்கார தொழிலதிபர்.
அவனுக்கும் கதையின் நாயகி ரேகாவுக்கும் (ஷோபா) ஒரு தியேட்டரில் சந்திப்பு நிகழ்கிறது. அதற்கு பிறகு அவர்களுடைய சந்திப்பு சந்துருவுடைய ஆஃபிஸில் நிகழ்கிறது ஒரு டொனேஷன் கேட்டு அவரும் அவருடைய தோழியும் அங்கு வந்து செல்கிறார்கள்.
தன்னுடைய இந்த பெண்கள் மீதான வெறுப்பு அதுவும் விலைமாதர்கள் மீதான கொலை வெறி அதிகமாகி அவன் கொல்ல ஆரம்பிக்கிறான். அப்படி ஒரு விலைமாதரை கொலை செய்யும் போது அவன் பயன்படுத்திய ஸ்கூட்டர் போலீசில் எவிடென்சனாக கிடைக்கிறது. தன்னுடைய இந்த கொலை செய்யும் வெறியை பற்றி அவனுடைய மனோதத்துவ டாக்டரிடம் அவன் ஆலோசனை கேட்கிறான் அதில் அவர் உனக்கு மனதிற்கு பிடித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்தால் இந்த போக்கு மாறுபடும் எனவும் கூறுகிறார்.
இதை ஏற்று தான் ஆசைப்படும் பெண்ணான ரேகாவிடம் சென்று தன்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதமா எனக்கேட்கிறான். அதற்குஅவள் ஒத்துக்கொள்ளவில்லை அதன் பிறகு அவளை ஒரு நாளில் கடத்தி அவனுடைய ஊட்டி பங்களாவிற்கு கூடி சென்றுவிடுகிறான்.
அதன் பிறகு ரேகா தப்பித்தலா இல்லையா ?
சந்துரு போலீஸிடம் சிக்கினானா ?
அவனுடைய இந்த நிலைக்கு என்ன காரணம் ?
எனும் பல கேள்விகளுக்கு சஸ்பென்சோடு பதில் சொல்லியுள்ளனர்.
பிரதாப் போத்தன் ஒரு psychoவாக நடிக்க தேர்ந்து எடுத்துஇருப்பது அவருக்கு மிகவும் பொருத்தமான வேடம். ஒரு நிஜமான psycho மனேரிசம் கச்சிதமாக பொருந்தியிருக்கும். கதையில் வரும் காந்திமதி கேரக்டர், அப்போதைய Brothel தொழில் செய்யும் பெண்களை கையாளும் விதம் பல படங்களுக்கு ஒரு டெம்ப்ளட்டேஆக அமைந்து இருப்பார்.
படத்தில் வரும் மாஸ்டர் ஹாஜா ஷெரிப் (அந்த ஏழு நாட்கள் - எடோ கோபி) ஒரு சிறு வேடம் என்றாலும் அருமையாக நடித்துஇருப்பர். போலீஸ்அகா வரும் கல்கத்தா விசுவநாதன் கேரக்டர் அப்போதைய போலீசிற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
படத்தில் வரும் ஆங்கில உரையாடல்கள் இப்போதைக்கு இருக்கும் GVM படங்களின் சாயலை நியாபகப்படுத்துகிறது. படத்தின் சினிமாட்டோகிராபி வேற லெவல் ஒவொரு பிரமேலும் மகேந்திர ஜாலம் காட்டியுள்ளார். அப்போதைக்கு வந்த படங்களில் இந்த படத்தின் கிளாஸுப் காட்சிகள் அதிகம் பேசப்பட்டது.
நாயகியாக வரும் ஷோபா அருமையாக நடித்துஇருப்பர் அவருடைய இறுதியாண்டாக அமைந்ததோ என்னவோ அவர் வரும் இடங்களில் பிரகாசமாக ஒளிருந்துஇருப்பர். படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த இசை இளையராஜாவின் ட்ரடே மார்க் பாடலான "என் இனிய பொன் நிலவே..." ஒரு கிளாசிக் மெலடி.
இந்த திரைப்படம் psycho (1960) வெளியான alfrod ஹிட்ச்கோக்கின் ரீமேக் என்றும் பேசப்பட்டது. அந்த காலத்தில் வந்த ஒரு சூப்பர் Crime திரில்லர் இந்த மூடு பனி. பார்க்க தவறியவர்கள் நிச்சயம் பாருங்கள் youtubeல் காணக்கிடைக்கிறது.
உங்கள் நேரத்தினை செலவிட்டதற்கு நன்றி !

படித்தவை....பிடித்தவை...பற்றவை கார்த்திக் ஏகன்